யூசுப் பதான் ஓய்வு அறிவிப்பு
இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக திகழ்ந்த யூசுப் பதான் இன்றைய தினம் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய இளைய சகோதரர் இர்பான் பதான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது யூசுப் பதானும் அவரை தொடர்ந்துள்ளார்.
வெற்றிக் கூட்டணியில் யூசுப்
கடந்த 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை வெற்றியின்போது இந்திய அணியின் அங்கமாக திகழ்ந்தவர் யூசுப் பதான். மேலும் ஐபிஎல்லிலும் 2012, 2014ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்ற போதும் 2008ல் ராஜஸ்தான் ராயல் அணி வென்றபோதும் அந்த அணியில் இடம் பெற்றிருந்தார் யூசுப் பதான்.
அனைவருக்கும் நன்றி
இந்நிலையில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனது ஓய்வு குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார் யூசுப் பதான். தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணியினர், கோச்கள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கு அவர்களது ஒத்துழைப்பு மற்றும் அன்பிற்கு தான் நன்றி கூறுவதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
சிறப்பான ஆல்-ரவுண்டர்
இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 810 மற்றும் 236 ரன்களை எடுத்துள்ள யூசுப், கடந்த 2007ல் இந்தியாவிற்காக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். மேலும் சர்வதேச போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
யூசுப் நெகிழ்ச்சி
இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட் இன்னிங்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டு உலக கோப்பை வெற்றி மற்றும் சச்சின் டெண்டுல்கரை தனது தோள்களில் சுமந்தது சிறப்பான தருணங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.