டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான விக்கெட் ஒன்றின் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவில் உள்ள பேட்ஸ்மேன் எந்த தவறும் செய்யாமல் விக்கெட் ஆகி இருக்கிறார். பல நாட்களாக இந்த விக்கெட்டின் புதிர் விலாகாமல் இருக்கிறது.
சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான வீடியோக்களில் ஒன்றை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்து இருந்தார். அதில் உள்ள பேட்ஸ்மேன் பந்தை தொடாமல் கீப்பர் கையில் கொடுத்து விடுவார்.
ஆனால் இதை பார்த்து சில நிமிடம் யோசித்த அம்பயர் அதற்கு அவுட் கொடுத்து விடுவார். பேட்ஸ்மேனும் எதுவும் கேள்வி கேட்காமல் பெவிலியன் நோக்கி சென்றுவிடுவார். இந்த வீடியோவை யுவராஜ் பகிர்ந்து குழப்பமான 'எமோஜி' போட்டு இருந்தார்.
இந்த விக்கெட்டில் பேட்ஸ்மேன் பந்தை தொட மாட்டார். பேட்டும் ஸ்டம்பை தொட்டு இருக்காது. அமைதியாக இருந்த அவருக்கு அம்பயர் விக்கெட் கொடுத்து இருப்பார். இந்த நிலையில் யுவராஜின் குழப்பத்திற்கு கிரிக்கெட் விமர்சகர் மோகன்தாஸ் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கத்தின்படி "இந்த போட்டி தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு பணம் சேர்ப்பதற்காக நடத்தப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் தொடர்ந்து இரண்டு பந்துகளை விட்டுவிட்டார். அந்த போட்டியின் விதிப்படி தொடர்ந்து இரண்டு பந்துகளை அடிக்க முடியாமல் விட்டுவிட்டால் அவுட். அதனால் தான் அம்பயர் விக்கெட் கொடுத்தார்'' என்று கூறியிருக்கிறார்.
யுவராஜ் சிங்கால் பல நாள் ரகசியம் தற்போது வெளியே வந்து இருக்கிறது.