களம் கண்டார்
2000வது ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்தவர் ஜாகீர்கான். அதே ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஒருநாள் போட்டியில் அவர் களம்புகுந்தார்.
விக்கெட்டுகள்
டெஸ்ட்டில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் ஜாகீர் வீழ்த்தியுள்ளார். டி20 அரங்கில், 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இந்தியாவின் யார்க்கர் புலி
வாசிம் அக்ரம் உள்ளிட்ட சர்வதேச வேக பவுலர்கள் யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை மிரட்டி வந்த நிலையில், இந்தியாவில் இருந்தும் அப்படி ஒரு வீரரை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஜாகீர்கான்.
ஸ்டம்புகள் பறக்கும்
மிதவேக பந்து வீச்சாளர்களை கொண்ட இந்தியாவில், மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக வீசும் திறன் பெற்றவர் ஜாகீர். அதே வேகத்தில், துல்லியமாக யார்க்கரும் வீசி, பேட்ஸ்மேன்களை ஏமாற்றி ஸ்டம்புகளை பறக்கவிடும் ஜாகீர்கான் பவுலிங் ஸ்டைலை பார்க்க ரசிகர்களில் தனிப்பிரிவினர் தவம் கிடந்தனர். இன்ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங் என இரு வகை ஸ்விங் பந்து வீச்சிலும் திறம்பட செயல்பட்டவர் ஜாகீர்கான்.
பாழ்படுத்திய ஐபிஎல்
ஐபிஎல் தொடர் வந்த பிறகு ஜாகீர்கான் தனது பந்து வீச்சில் மாற்றம் கொண்டுவந்து ஆட வேண்டியதாயிற்று. அது அவரது சர்வதேச கிரிக்கெட்டை குலைத்துப்போட்டுவிட்டது. வழக்கமான வேகத்தோடும், துல்லியத்தோடும் ஜாகீர்கானால் பந்து வீச முடியாமல்போனதால், அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கழித்து வைக்கப்பட்டார்
எப்போவாவது ஒரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு தரப்படும் சூழல் உருவானது. ஜாகீர்கான் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் பங்கேற்றார். இந்நிலையில், இன்று அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
|
அம்பலப்படுத்திய சுக்லா
ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா இச்செய்தியை முதலில் வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளார். தனது டிவிட்டுகளில் ராஜிவ் சுக்லா இத்தகவல்களை பகிர்ந்துள்ளார்.
டிவிட்டுகள்
"ஜாகீர்கான் இன்று தனது ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளார். ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கைக்காக, அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து ஆடுவார் என்று நம்புகிறேன்" இவ்வாறு அவர் டிவிட்டுகளில் கூறியுள்ளார்.
|
ஜாகீர் அறிவித்தார்
இதனிடையே மதியம் 1 மணியளவில், தனது டிவிட்டர் பக்கத்தில், ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஜாகீர்கான். ஐபிஎல்-9ல் நான் ஆடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். அதேநேரம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன் என்று ஜாகீர்கான் அதில் தெரிவித்துள்ளார்.