இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் லாகூர் வந்தடைந்தனர்.
2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 8 பேர் உயிரிழந்தனர். அதிருஷ்டவசமாக, இலங்கை விளையாட்டு வீரர்கள் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்துக்கு பிறகு டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து கொண்ட எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை.
ஆறு வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அனைத்துப் போட்டிகளும் லாகூரில் நடைபெற உள்ளன.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக லாகூர் வந்த ஜிம்பாப்வே வீரர்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். மொத்தம் ஆறாயிரம் போலீசார், கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர்களுக்கு நிகரான பாதுகாப்பை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கியுள்ளது பாகிஸ்தான்.