பிரேசில் அணி
அதேபோல் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், அந்த அணி முதல் கோல் அடிக்க செய்த அசிஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள அணிகளுள் ஒன்றான பிரேசில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நெய்மாரும் சிறந்த ஃபார்மில் இருப்பதால், பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நெய்மார் காயம்
இந்த நிலையில் செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மார் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செர்பியா அணிக்கு எதிரான போட்டியின் 79வது நிமிடத்தில், எதிரணியின் தடுப்பை தகர்த்து நெய்மார் பந்தை கடத்தி சென்றார். அப்போது எதிரணி வீரர் பந்தை பறிக்க முயன்றபோது, நெய்மார் கால் இடறி கீழே விழுந்தார்.
கண்ணீர் விட்ட நெய்மார்
இதில் நெய்மாருக்கு கணுக்காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்திலேயே துடித்தார். இதன்பின்னர் பிரேசில் அணியின் மருத்துவர் மைதானத்திற்கு வந்து நெய்மாரை பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் நெய்மார் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். அதேபோல் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த போது, அவரது கண்கள் கலங்கி இருந்தன. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறுகையில், நெய்மாரின் காயத்தின் தன்மை குறித்து முழுமையாக அறிய நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. விரைவில் காயம் குறித்து முழுமையான தகவல்களை பெறுவோம் என்று தெரிவித்தார்.
பயிற்சியாளர் கருத்து
அதேபோல் பயிற்சியாளர் டைட் கூறுகையில், நெய்மார் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை ரசிகர்கள் உறுதியாக நம்பலாம். அவரை விளையாட வைப்பதே எங்களின் குறிக்கோள் என்று தெரிவித்தார்.