மும்பையின் கனவை தகர்த்த டெல்லி டைனமோஸ்…. மச்சான்கள் வயிற்றில் பாலூற்றியது
டெல்லி: தொடர்ந்து தோல்வி அடைந்ததால், புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த டெல்லி டைனமோஸ் அணி, 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற, எப்சி மும்பை சிட்டி அணியின் அரை இறுதி கனவு பணால் ஆனது. அதே நேரத்தில், சென்னையின் எப்சி அணியினர் வயிற்றில் இந்தப் போட்டி பால் வார்த்தது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4வது சீசன் அரை இறுதி சுற்றை எட்டியுள்ளது. பெங்களூரு எப்சி, எப்சி புனே சிட்டி அணிகள் அரை இறுதிக்குள் ஏற்கனவே நுழைந்தன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அரை இறுதிக்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மும்பை சிட்டி எப்சி அணியும், அரை இறுதிக்கான சான்சே இல்லாத டெல்லி டைனமோஸ் அணியும் மோதின.
ஏதோ கோமாவில் இருந்து மீண்டதுபோல், கடந்த ஐந்து ஆட்டங்களில் தோல்வியடையாமல் எதிரணிகளை அசத்தி வருகிறது டெல்லி டைனமோஸ் அணி. நேற்றைய போட்டியையும் சேர்த்து அந்த அணி பெற்றுள்ள, 18 புள்ளிகளில், 11 புள்ளிகள் கடைசி 5 ஆட்டங்களில் கிடைத்ததாகும்.
நேற்றைய ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் வென்றது. இதன் மூலம், மும்பை சிட்டி எப்சி அணியின் அரை இறுதி கனவை தகர்த்தது.
17 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை சிட்டி எப்சி அணி 23 புள்ளிகளுடன் உள்ளது. மார்ச் 3ம் தேதி சென்னையின் எப்சி அணியுடன் மும்பை சிட்டி எப்சி வெற்றி பெற்றாலும், அரை இறுதிக்கு நுழைய முடியாது.
மும்பை சிட்டி எப்சி அணியின் இந்த தோல்வி, சென்னையின் எப்சி அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைத்துள்ளது. 17 போட்டியலில் 29 புள்ளிகள் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி அடுத்ததாக மும்பை சிட்டியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது.
Story first published: Wednesday, February 28, 2018, 14:40 [IST]
Other articles published on Feb 28, 2018


Click it and Unblock the Notifications