கோல் இல்லாமல் டிரா
இந்த அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டம் இன்று நடக்க உள்ளது. அதில் பைனல்ஸ்க்கு போவது யார் என்பது தெரியவரும். மற்றொரு அரை இறுதியில், சென்னையின் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதுகின்றன. அதன் முதல் ஆட்டம் கோவாவில் நேற்று இரவு நடந்தது.
எப்சி கோவாவின் அதிரடி ஆட்டம்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் எப்சி கோவா அணி, இந்த சீசனில் மிகவும் ஆக்ரோஷமான, அதிரடியான அணியாக உள்ளது. இந்த சீசனில் அதிக கோலடித்துள்ள எப்சி கோவா, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக உள்ளது.
கூலாக விளையாட டோணியின் அணி
நேற்று நடந்த ஆட்டத்திலும், துவக்கத்தில் இருந்து எப்சி கோவா அணி அதிரடியாக விளையாடியது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக இருந்தது. அதே நேரத்தில் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் அணி, கூலாக, தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
டிரா செய்தது சென்னையின்எப்சி
ஆட்டத்தின் 64வது நிமிடத்தில், எப்சி கோவாவின் மானுவல் லான்சாரோடா புருனே கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். எப்சி கோவாவுக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்ற நிலையில், கிரிக்கெட்டில் சிறந்த பினிஷரான டோணியின் சென்னையின் எப்சி, 71வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கியது. சப்ஸ்டியூட் வீரரான அனிருத் தாபா இந்த கோலை அடித்தார்.
அதன்பிறகு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அரை இறுதி ஆட்டம், 13ம் தேதி நடக்கிறது.