கோவா கோலடிக்க சென்னையின் எப்சி வென்றது
மார்கோ: ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் போட்டியில், மிகவும் முக்கியமான ஆட்டத்தில் கோவா அணி கோலடிக்க உதவியதால், சென்னையின் எப்சி வென்றது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அரை இறுதி சுற்றுக்கு, அறிமுக அணியான பெங்களூரு எப்சி ஏற்கனவே முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சியும், கோவா எப்சி அணியும் தங்களுடைய அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கான ஆட்டம் மார்கோவில் நேற்று இரவு நடந்தது.
இதில் சென்னையின் எப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் 15 ஆட்டங்களில் 27 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு சென்னையின் எப்சி முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் வென்றால், அரை இறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் கோவா எப்சி அணிக்கு இருந்தது. அதனால், மிகவும் பரபரப்பாக ஆட்டம் இருந்தது.
ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் சென்னையின் எப்சி அணியின் இனிகோ கால்டரன் கோலடித்தார். ஆனால், அந்த கோல் வாய்ப்பை உருவாக்கி தந்தது கோவா எப்சி அணி.
சென்னையின் எப்சி அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல், கோவா எப்சி அணி தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. அந்த நேரத்தில், சென்னையின் எப்சியின் ஜிஜே லால்பக்குலா அழகாக பந்தை கடத்தி வந்தார். கோல் கீப்பர் நவீன் குமார் உஷாராக இருந்தார்.
ஜிஜே அடித்தப் பந்தை தடுப்பதற்கு கோவா எப்சியின் புருனோ பின்ஹெரினோ மற்றும் நாராயண தாஸ் முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் செய்த குழப்பத்தால், நாராயண தாஸ் பந்தை கோலுக்கு நேராக அனுப்பி வைத்தார். அங்கு காத்திருந்த இனிகோ கால்டரன் கோலாக்கினார்.
18ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணியை சென்னையின் எப்சி சந்திக்கிறது.
Story first published: Friday, February 16, 2018, 15:18 [IST]
Other articles published on Feb 16, 2018


Click it and Unblock the Notifications