குவிந்து வரும் ரசிகர்கள்
ஐரோப்பிய நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நேரில் பார்த்து மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதே ரசிகர்களின் குறிக்கோளாகவே இருக்கும். குறிப்பாக பிடித்த அணியின் வெற்றியை ரசிகர்கள் ஒன்றாக கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து மைதானத்திலேயே கொண்டாடி திளைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் மைதானங்களிலேயே ரசிகர்கள் உற்சாக பானங்களுடன் வலம் வருவதை பார்க்க முடியும்.
மது விற்பனை
ஆனால் இஸ்லாமிய நாடான கத்தாரில் மது அருந்துவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. அங்கு பொது இடங்களில் மது அருந்த யாருக்கும் அனுமதி கிடையாது. நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மது விற்பனை செய்யப்படும். உலக கோப்பை போட்டியை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு வசதியாக மைதானங்களில் குறிப்பிட்ட இடங்களில் மதுவிற்பனை நடைபெறும் என்று முதலில் தகவல் வெளியாகி இருந்தது.
பீர் அருந்த தடை
தற்போது கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்களில் போதை தரக்கூடிய பீர் விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் திடீரென தடை விதித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே ஆடைக் கட்டுப்பாடு, பாலியல் உறவு, மது அருந்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உயிர் வாழலாம்
இதுகுறித்து ஃபிபா அமைப்பின் தலைவர் இன்ஃபான்டினோ கூறுகையில், ஒரு நாளில் மூன்று மணி நேரம் பீர் அருந்தாமல் உயிர் வாழ்வது எளிதானது. தனிப்பட்ட முறையில் கூறினால், பீர் அருந்தாமல் இருந்தால் உயிர் பிழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஃபிபா தலைவரின் பேச்சு ரசிகர்களிடையே விரக்தியை அதிகரித்துள்ளது.