சிறுவயது ஆசை
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மேடிரா தீவில் தோட்ட வேலைகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளிக்கு 1985ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் தான் ரொனால்டோ. வறுமையின் பிடியில் இருந்த ரொனால்டோவின் தந்தைக்கு கால்பந்து கிளப்பில் உதவியாளர் பணி கிடைக்க, அவருக்கு உதவியாக அவ்வப்போது செல்கிறார் ரொனால்டோ. அங்கு வீரர்கள் விளையாடுவதை பார்த்த அவருக்கு சிறுவயதிலேயே கால்பந்து மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
இருதய கோளாறு
அவரின் ஆசையை பார்த்த தந்தை, தன் மகனுக்காக கிளப்பில் பேசி விளையாட அனுமதி வாங்குகிறார். வீட்டில் கிடந்த ஒரு கிழிந்த ஷூவை மாட்டிக்கொண்டு முதல் முறையாக மைதானத்தில் கால் வைக்கிறார். அன்று தொடங்கிய அவரின் பயணம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ரொனால்டோவிற்கு 15 வயது இருக்கும் போது, இதயத்துடிப்பு சீராக இல்லை என்ற பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இது அரிதாக நடக்கக்கூடியது.
துணிச்சல் முடிவு
இதனை சரி செய்ய வேண்டும் என்றால் ஒன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அதில் உயிர் கூட போக வாய்ப்புள்ளது. மற்றொன்று வாழ்நாள் முழுவதும் ஓடுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறினார். இதில் விளையாட்டு தான் முக்கியம் என தைரியமாக அறுவை சிகிச்சைக்கு சென்றார் ரொனால்டோ.
முதல் அணி
அதன்பிறகு ஸ்போர்டிங் சிபி என்ற கிளப்பிற்காக விளையாடி வந்த ரொனால்டோ, முதல் முறையாக 2003ம் ஆண்டு மேன்செஸ்டர் யுனைடெட் என்ற பெரிய கிளப்பில் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 18 தான். அவரின் முதல் சீசனிலேயே எஃப்ஏ கோப்பையை வென்றார். அதன் பிறகு சாம்பியன்ஸ் லீக், ஃபிஃபா உலகக்கோப்பை என தொடர்ச்சியாக 3 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.
வென்ற விருதுகள்
இவற்றின் பலனாக 23வயதில் தன்னுடைய முதல் பலோன் டி ஆர் விருதை வென்றார். இது கால்பந்து விளையாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். இதுதான் ரொனால்டோ வாழ்கையின் 2வது அதியாயம் என்று கூறலாம். 2009ம் ஆண்டு ரியல் மெட்ரிட் அணிக்கு 94 மில்லியன் ஈரோ டாலருக்கு ( சுமார் ரூ. 834 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் உலகின் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
குவிந்த வெற்றிகள்
இந்த அணியில் இணைந்தவுடன் லா லீக் தொடர், கோபா தொடர் என அடுத்தடுத்து 15 கோப்பைகளை வென்று கொடுத்து ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தை பெற்றார். மேலும் 2013, 2014, 2016, 2017 என தொடர்ச்சியாக பலோன் டி ஆர் விருதுகளை தட்டிச்சென்றார். ரியல் மெட்ரிட் அணிக்காக 9 வருடங்கள் விளையாடிய ரொனால்டோ, 2018ம் ஆண்டு ஜுவாண்டஸ் அணிக்காக 100 மில்லியன் ஈரோப்பியன் டாலருக்கு ( சுமார் ரூ.850 கோடிக்கு) ஒப்பந்தம் ஆனார். 30 வயது வீரர் ஒருவர் இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆனது அனைவருக்கும் ஆச்சரியமானது. அதன் பிறகு தற்போது மீண்டும் தனது தாய் கிளப்பான மேன்செஸ்டர் யுனெட்டெட்டிற்கே திரும்பியுள்ளார்.
Recommended Video
மொத்த சொத்து மதிப்பு
இதுவரை 5 பல்லோன் டி ஆர் விருதுகள், 4 ஐரோப்ப கோல்டன் ஷூஸ், 32 சாம்பியன் கோப்பைகளை வென்று கொடுத்த ரொனால்டோவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.4,250 கோடி ஆகும். இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரரான விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.980 கோடியே ஆகும். சச்சினின் சொத்து மதிப்பு ரூ.1,110 கோடி மட்டுமே ஆகும். இவர்கள் இருவரின் சொத்துக்களையும் சேர்த்தால் கூட ரொனால்டோவுக்கு அருகில் வர முடியாது என்பதே நிதர்சனம். இதன் மூலம் அயல்நாடுகளில் கால்பந்து எவ்வளவு முக்கியமான விளையாட்டாக உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.