மரடோனாவின் புகழ்
லயோனல் மெஸ்ஸி யாரும் தொட்டுவிடாத இடத்திற்கு சில கைகள் அவரை அழைத்து சென்றுள்ளன. அதில் ஒன்று பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி, இன்னொன்று கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் உடையது. தனது கோல் ஒன்று பற்றி மரடோனா அடித்த புகழ் பெற்ற "அது கடவுளின் கை" கமெண்ட் உலக பிரசித்தி பெற்றது.
கடவுளின் கை
அதுபோன்ற ஒரு கடவுளின் கை தான் நேற்றைய போட்டியில் அர்ஜென்டினாவையும், மெஸ்ஸியையும் காப்பாற்றியது. நேற்று மட்டுமல்ல, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அதே கைகள் தான் காப்பாற்றியது. ஒவ்வொரு முறையும் அர்ஜென்டினா அணியை காக்கும் அரணாக எமிலியோ மார்ட்டினஸ் செயல்பட்டுள்ளார்.
அர்ஜென்டினா அணியின் அரண்
வீரம் படத்தில் அஜித் சொல்வது போல், அர்ஜென்டினா அணியை வீழ்த்த வேண்டும் என்றால், முதலில் எமிலியானோ மார்டினஸை கடக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. கால்பந்து விளையாட்டு நடைபெறும் 90 நிமிடங்களில் ஒவ்வொரு வீரரும் அதிகபட்சம் 5 நிமிடங்கள் தான் பந்தை தங்கள் கால்களுக்குள் வைத்திருப்பார்கள்.
கால்பந்து ஆட்டம்
மீதமுள்ள 85 நிமிடங்களில் மற்ற வீரர்களின் ஆட்டத்திற்கேற்ப செயல்பட முயற்சிப்பதும், பந்தை கணக்கிட்டு ஓடுவதும் தான் வீரர்களின் ஆட்டமாக இருக்கும். ஆனால் கோல் கீப்பர் கைகளில் 5 நிமிடம் கூட பந்து இருக்காது. ஆனால் எந்த நிமிடத்தில் பந்தை தேடி வரும் என்பது தெரியாமல், எல்லா நேரத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தந்தையின் கடன்
இந்த எச்சரிக்கை அணுகுமுறை எமிலியானோ மார்டினஸ்-க்கு, சிறு வயதிலேயே வந்துவிட்டது. 17 வயதி அர்ஜென்டினாவில் இருந்து வெளியேறி, ஆர்சனல் கிளப் அணிக்காக விளையாட சென்ற போது, கண்ணீருடன் தாயும், சகோதரரும் மார்டினஸை தடுத்து நிறுத்தினார். ஆனால் மார்டினஸ் யார் பேச்சயும் கேட்கவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாள் இரவிலும் கடன் தொல்லையால் அவரின் தந்தை அழுவதை நின்று பார்த்திருக்கிறார். தந்தை கண்ணீர் தான் மார்டினஸை அர்ஜென்டினாவில் இருந்து வெளியேற வைத்தது.
ஆஸ்டன் வில்லா
ஆர்சனல் அணிக்காக விளையாடினாலும், 10 ஆண்டுகளில் 15 போட்டிகளில் மட்டுமே மார்டினஸ் அந்த அணிக்காக ஆடியுள்ளார். மீதமிருந்த நேரங்களில் லோன் முறையில் பல்வேறு அணிகளுக்கு விளையாடினார். பின்னர் 2020ம் ஆண்டு ஆர்சனல் அணியில் இருந்து வெளியேறி, ஆஸ்டன் வில்லா அணியில் இணைந்தார்.
பார்வையாளர் டூ கோல் கீப்பர்
பிரிமியர் லீக் தொடரில் அந்த அணிக்காக 15 போட்டிகளில் கோல் விடாமல் சாதனை படைக்க, அர்ஜென்டினா அணியின் பார்வை மார்டினஸ் மீது விழுந்தது. 2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பார்வையாளர் அரங்கில் இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளித்த மார்டினஸ், 2022ம் ஆண்டு உலகக்கோப்பையில் அதே அணிக்காக களமிறங்கினார்.
ரசிகர்கள் மனதில் மார்டினஸ்
இப்போது தனது குடும்பத்தின் ஆசையோடு சேர்த்து, தனது தேசத்தின் ஆசையையும் எமிலியானோ மார்டினஸ் நிறைவேற்றியுள்ளார். இனி ஒவ்வொரு முறையும் அர்ஜென்டினா அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க எதிரணி வீரர்கள் முயற்சிக்கும் போதும், டான்ஸ் ஆடிக் கொண்டு கோல் போஸ்ட் முன் பந்தை தடுக்க எமிலியானோ மார்டினஸ் நிற்பார். அவர் ஓய்வு பெற்றாலும், மார்டினஸ் பெயர் ஒவ்வொரு அர்ஜென்டினா ரசிகரின் மனதிலும் இருக்கும்.