ஃபிபா உலகக் கோப்பையில் விளையாட இந்தியா மறுத்தது... அதற்கு காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க!
சென்னை: ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு, 1950ல் வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதில் பங்கேற்க மறுத்தது. ஷூ போடாமல் வெறும் காலில் விளையாட அனுமதிக்க மறுத்ததுதான் இதுவரை காரணமாக கூறப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் வேறு.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த தகுதிச் சுற்று போட்டிகளில் வென்று நுழைந்துள்ளன.
வழக்கம் போல் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது எப்போது என்று பலரும் ஏக்கத்துடன் கூறுவார்கள். ஆனால், 1950ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய கால்பந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் பங்கேற்க இந்திய கால்பந்து கூட்டமைப்பு மறுத்துவிட்டது.
ஷூ போடாமல் வெறும் காலில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்தான், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால், அது காரணம் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

சாதாரண போட்டியா
1950ல் பிரேசில் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும்படி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பிரேசில் அழைப்பு விடுத்தது. பயணச் செலவை ஏற்பதாகவும் கூறியது. ஆனாலும் இந்தியா மறுத்தது. அந்த உலகக் கோப்பைதான் 4வது உலகக் கோப்பையாகும். அந்த நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை ஒலிம்பிக் போட்டிதான் மிகவும் முக்கியமான, பெரிய போட்டியாகும்.

நீண்ட தூர பயணம்
இங்கிருந்து பிரேசிலுக்கு நீண்ட தூரம் கப்பலில் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த ஒரு `சின்ன' போட்டிக்கு அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று அந்தப் போட்டியில் பங்கேற்க இந்தியா மறுத்துள்ளது. நீண்ட தூரப் பயணத்தை காரணம் காட்டி துருக்கியும் அந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. ஐரோப்பிய அணிகளான ஸ்காட்லாந்து, அயர்லாது, போர்ச்சுகள், பிரான்ஸ் போன்றவையும் அந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை.

வாய்ப்பு வந்தது எப்படி
மேலும் இந்திய கால்பந்து அணி 70 நிமிடங்கள் கொண்ட போட்டிகளிலேயே விளையாடியுள்ளது. 90 நிமிடப் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இல்லை. அதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆசியாவில் இருந்து பெரும்பாலான அணிகள் பங்கேற்காததால், இந்தியாவுக்கு அப்போது அழைப்பு விடுக்கப்பட்டது.

வெறும் காலில் விளையாடினர்
1948ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஷூ போடாமல் தான் விளையாடியது. ஆனால் பின்லாந்தில் நடந்த அதற்கடுத்த ஒலிம்பிக்கில் ஷூ இல்லாமல் கடும் குளிரில் விளையாட முடியாமல் இந்திய அணி தவித்தது. அதன்பிறகே ஷூ அணிவது கட்டாயமாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications