ஆம்ஸ்டர்டாம்: யார் எப்போது அடித்தாலும் அடிவாங்கும் கட்டப்புள்ள இல்ல, கட்டப்பாவாகவும் மாறுவோம் என்பதை நிரூபித்துள்ளது, இளம் வீரர்கள் மட்டும் கொண்டுள்ள நமது ஹாக்கி அணி.
ஜூனியர்களுடன் பெயருக்கு சில சீனியர்கள் மட்டுமே உள்ள, இந்திய ஹாக்கி அணி, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஒருகாலத்தில் ஒலிம்பிக்கில், 8 தங்கம் வாங்கினோம்' என்று சொல்லிக் கொள்ளும் அளவிலேயே, நமது ஹாக்கி அணி உள்ளது.
இந்திய அணிக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், வெளிநாடுகளில் பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதலில் பெல்ஜியத்துக்கு எதிரான தொடரில், 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
அதைத் தொடர்ந்து, தற்போது நெதர்லாந்துக்கு சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலக தரவரிசையில், 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியுடனான முதல் போட்டியில், 6வது இடத்தில் உள்ள இந்தியா வென்றது.
நேற்று நடந்த, இரண்டாவது போட்டியில், களமிறங்கிய, இந்திய வீரர்கள், 11 பேரில், 9 பேர் ஜூனியர் வீரர்கள். தொடக்கத்தில் இருந்தே நமது வீர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 4வது நிமிடத்தில், குர்ஜன்ட் முதல் கோலை அடித்தார். 51வது நிமிடத்தில், மன்தீப் சிங் அணியின் இரண்டாவது கோலை அடித்தார். ஆனால், நெதர்லாந்து அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில், இந்த போட்டியையும், தொடரையும் இந்தியா வென்றது. அடுத்தாக, ஆஸ்திரியா அணியுடன் விளையாட உள்ளது.