பேக் அடிக்கிறதா ஈராக் கால்பந்து அணி?.. ஏசியன் கேம்ஸ் கால்பந்து க்ரூப்பில் குழப்பம்!
பாக்தாத் : ஈராக் கால்பந்து அணி ஏசியன் கேம்ஸில் விளையாடுவதில் இருந்து பின்வாங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏசியன் கேம்ஸ் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஈராக் கால்பந்து அணியின் நிலைப்பாடு, கால்பந்து தொடரின் அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சில நாட்கள் முன்பு, அதிக வயதுடைய வீரர்களை பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஈராக் கால்பந்து அணியின் அதிகாரிகள் சிலர், பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்தே ஏசியன் கேம்ஸில் இருந்து பின்வாங்கும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதே போல, சில வாரங்கள் முன்பு பிலிப்பைன்ஸ் பாஸ்கெட்பால் அணி ஏசியன் கேம்ஸில் இருந்து பின்வாங்கியது. அதை பின்பற்றி, ஈராக்கும் இப்படி செய்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், ஈராக் கால்பந்து அமைப்பின் அதிகாரி ஒருவர், தங்கள் அணி ஏசியன் கேம்ஸில் இருந்து பின்வாங்குவதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார். ஈராக் அணியின் வீரர்கள் தற்போது பயிற்சியில் இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம், ஏசியன் கேம்ஸை நடத்தி வரும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இதுவரை இந்த விஷயத்தில் எந்த கருத்தும் கூறவில்லை. இதனால், இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏசியன் கேம்ஸ் கால்பந்து அணி பிரிவுகளில் ஏற்கனவே சில முரண்பாடுகள் உள்ளன. முதலில் ஆறு பிரிவுகளில், ஒரு பிரிவுக்கு நான்கு நாடுகள் என 24 அணிகள் இடம் பெற்றன. இடையில், பாலஸ்தீன் மற்றும் யுனைடட் அரேப் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் விடுபட்டதாக கூறி, இரண்டு பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இதனால், நான்கு பிரிவுகளில் நான்கு நாடுகளும், இரண்டு பிரிவுகளில் ஐந்து நாடுகளுமாக, முறையற்ற பிரிவுகளாக இருக்கின்றன.
ஈராக் பங்கேற்றுள்ள பிரிவில் நான்கு நாடுகள் உள்ளன. இந்த நிலையில், ஈராக் பின்வாங்கினால், மூன்று நாடுகள் மட்டுமே இருக்கும். தொடர்ந்து பிரிவுகளை மாற்றி வந்தால் மற்ற நாடுகள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே, ஏசியன் கேம்ஸ் கால்பந்து தொடர் ஆகஸ்ட் 10 முதல் தொடங்க உள்ளது.
ஏசியன் கேம்ஸில் இந்திய கால்பந்து அணி பங்கேற்கவில்லை, இந்திய கால்பந்து கூட்டமைப்பு பல முறை கேட்டுக் கொண்ட பின்னரும், இந்திய ஒலிம்பிக் சங்கம், கால்பந்து அணியை அனுப்ப மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, August 2, 2018, 16:05 [IST]
Other articles published on Aug 2, 2018


Click it and Unblock the Notifications