கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐ.எஸ்.எல். கால்பந்து.. நீத்தா அம்பானி, டெண்டுல்கர், டோணி பங்கேற்பு!
குவஹாத்தி:3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. ஐ.எஸ்.எல். தலைவர் நீத்தா அம்பானி, கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோணி, பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்) போட்டி 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அறிமுக போட்டி தொடரில் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டில் சென்னையின் எப்.சி. அணி இறுதிப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது,
நடப்பாண்டு கால்பந்து போட்டிகள் இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை 8 இடங்களில் நடைபெற உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

போட்டிகள்...
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு லீக்கில் முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இறுதிப் போட்டி
அரை இறுதிபோட்டி இரண்டு சுற்றுகளை கொண்டதாகும். இதில் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

முதல் போட்டி
குவஹாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

தொடக்க விழா
முதலாவது லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்றது. ஐ.எஸ்.எல். தலைவர் நீத்தா அம்பானி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தி நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோணி உள்பட பலர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications