வந்தாச்சு… ஐ.ஸ்.எல் கால்பந்து தொடர்-கோப்பையை வெல்லப்போவது யார்?
கால்பந்து என்ற அரக்கன் உலகம் முழுவதும் ஆட்சி செய்ய, இந்தியாவில் மட்டும் அவன் உரங்கி கொண்டு இருக்கிறான் .. இந்தியாவில் கால்பந்து குறித்து முன்னாள் சர்வதேச காந்பந்து சம்மேளனத் தலைவர் செப் பிளேட்டர் கூறிய கருத்து தான் இது..
கேரளா, கொல்கத்தா மற்றும் வட இந்திய மாநிலங்களை தவிர கால்பந்து மற்ற இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. இப்படி தூங்கி கொண்டிருந்த அரக்கனை தட்டி எழுப்ப தொடங்கப்பட்ட தொடர் தான் ஐ.எஸ்.எல். கால்பந்து
ஐ.பி.எல். பாணியில் தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்போது 8வது சீசன் வரை வந்து வெற்றிநடை போடுகிறது. தற்போதைய சீசனில் 11 அணிகள் பங்கேற்றுள்ளன.

கோவா
8வது சீசன் போட்டிகள் அனைத்தும் கோவாவில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வரும் ஜனவரி 9ஆம் தேதி வரையிலான ஒரு பாதி அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த ஏ.டி.கே.மோகுன் பாஹன் அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் மோதுகிறது.நடப்பு சாம்பியனான மும்பை அணி, வரும் நவ. 22ஆம் தேதி கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

சென்னை அணி
நவ.23ஆம் தேதி சென்னையின் எப்.சி. அணி தனது முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் விளையாடுகிறது. கடந்த சீசனில் 8வது இடத்தையே பிடித்த சென்னை அணி, இம்முறை சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சென்னை அணியின் கேப்டனாக அனிருத் தாபா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளராக பேன்டோவிச்செயல்படுகிறார். இந்திய இளம் ரத்தங்களான நிந்தோய் மீட்டீய், தவீந்தர் சிங், போலாந்து வீரரான லுகாஸ், ஏரியல் போரிசிக் ஹங்கேரி வீரர் விளாடிமிர் ஆகிய புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 3வது முறையாக சென்னை அணி பட்டம் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதிய விதிகள்
இம்முறை ஐ.எஸ்.எல். போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒரு அணியில் களமிறங்க முடியும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக இது ஐந்து என்ற கணக்கில் இருந்தது. இந்த புதிய விதியின் மூலம் உள்நாட்டு வீரர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன் எப்போதும் இல்லாத வகையில், வார இறுதி நாட்களில் இரவு 9,30 மணிக்கும் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டிய அணிகள்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இதுவரை எந்த அணிகளும் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டதில்லை.இதனை மாற்றும் முணைப்பில் மும்பை அணி உள்ளது. கோவா அணி, சீசன் தொடக்கத்தில் நடைபெற்ற துரந்தா கோப்பையை வென்றது நல்ல பார்மில் உள்ளது. நட்சத்திர வீரர் சுனில் செத்ரி விளையாடும் பெங்களூரு அணி இம்முறை புதிய பயிற்சியாளரான மார்கோ மேற்பார்வையில் விளையாடுகிறது. 2 முறை இறுதிப் போட்டி வரை வந்த கேரள அணி, இம்முறை புதிய வீரர்கள், பயிற்சியாளர்களுடன் கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் உள்ளது.


Click it and Unblock the Notifications