கால்பந்துக்கு இவ்வளவு அலப்பறையா.. இஸ்லாம் மதத்திற்கு எதிரானது.. கேரள இஸ்லாமிய அமைப்பு கண்டனம்
கொச்சி : ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கையில் கிரிக்கெட் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் கூட தேவையில்லை. கிரிக்கெட் மட்டுமே இவனுக்கு போதும் என்று நம் தாய், தந்தையிடம் வசை வாங்கி இருப்போம்.
ஆனால் நம் அண்டை மாநிலத்து சகோதரர்கள், சற்று வித்தியாசமானவர்கள். அவர்களுக்கு கால்பந்து என்றால் உயிர், உலககோப்பை கால்பந்து போல் ஒரு தொடர் நடைபெற்றால் போதும், கேரளாவே திருவிழா போல் மாறிவிடும்.
கால்பந்து உலககோப்பை போன்ற ஒரு தொடர் நடைபெறும் போது, நீங்கள் கேரளா சென்றால், நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது போர்ச்சுகல், பிரேசில், அர்ஜென்டினாவுக்கு சென்றுவிட்டோமா என்று நினைக்க தோன்றோம்.

கட் அவுட்
காரணம், அங்குள்ள இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த நாட்டு அணியின் ஜெர்சியை அணிந்து தான் சாலையில் செல்வார்கள். அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் ஆகிய நாட்டின் கொடி தான் ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் தோரணம் போல் கட்டப்பட்டு இருக்கும். தற்போத, ஒரு படி மேல் போய் சினிமா ரசிகர்களுக்கு நிகராக மெஸ்ஸி, நேமார், ரொனால்டோ ஆகியோர்களுக்கு கேரள ரசிகர்கள், கட் அவுட் வைத்துள்ளனர்.

பணத்தை வீணடிக்காதீர்
உலககோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காகவே ஒரு வீட்டை 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி, அதில் தங்களுக்கு பிடித்த அணிகளின் கொடியை வரைந்து இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கேரள சமஸ்தான ஜம் லாயத்துல் உலாமா என்ற அமைப்பு, கால்பந்துரசிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் பொதுச் செயலாளர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில், கால்பந்து வீரர்களுக்காக இளைஞர்கள் அவர்களுடைய பணத்தை வீணடித்து கட்அவுட் வைக்கிறார்கள்.

போதையாக மாறிவிட்டது
மாணவர்கள், தங்களுடைய கல்வியை பார்க்காமல், இரவு கண் விழித்து கால்பந்து போட்டியை கண்டு களித்து வருகிறார்கள். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த போர்ச்சுக்கல் கொடியை ஏந்தி , நமது நாட்டு கொடிக்கு அவமரியாதை செய்கிறார்கள். கால்பந்தை ஒரு விளையாட்டாக பார்க்க வேண்டும். ஆனால், கேரள இளைஞர்களுக்கு அது போதையாக மாறிவிட்டது.

இஸ்லாத்திற்கு எதிரானது
கால்பந்து வீரர்களை கொண்டாடுவதில் தவறு இல்லை. ஆனால் இவர்கள் வழிப்பட தொடங்கிவிட்டார்கள். இது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது. மற்ற நாட்டு கொடியை ஏந்தி, இந்திய கொடியை அவமரியாதை செய்ய வேண்டாம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த அமைப்பின் கருத்துக்கு, கேரள மாநில கல்வித்தறை அமைச்சர் சிவன்குட்டி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் முனீர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications