மாட்ரிட் : ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், ஒரே கால்பந்து அணியை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் நடைபெற்று வந்த லா லிகா கால்பந்து தொடரில் ஆலேவ்ஸ் அணி, கடந்த மார்ச் 6ஆம் தேதி வாலென்சியா அணிக்கு எதிராக ஆடியது.
அந்த போட்டிக்கு பின்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த கிளப்பில் இருக்கும் சுமார் 35 சதவீத பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.
இதுவரை 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று கால்பந்து வீரர்களும் அடக்கம். அது தவிர அந்த அணியில் பயிற்சியாளர் குழுவில் 7 பேருக்கும், 5 பணியாட்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.
அந்த கிளப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் அறிகுறியை வெளிப்படுத்தவில்லை என்றும், அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறி இருக்கிறது.
ஐரோப்பாவில் இத்தாலி மிக மோசமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கேயும் சீரி ஏ கால்பந்து தொடரில் பங்கேற்ற பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இத்தாலியை அடுத்து ஸ்பெயினில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கே இதுவரை 14,000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுள்ளது, இரு நாட்கள் முன்பு வரை அங்கே 3000 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கே இதுவரை 600 பேர் பலியாகி உள்ளனர்.