பெங்களூர்: பத்மஸ்ரீ விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை கெளரவமாக உணர்கிறேன் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், சாதனையாளருமான சுனில் செட்ரி தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகள் 2019 நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் பத்மஸ்ரீ விருதுக்கு சுனில் செட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுனில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதைப் பெருமையாகவும், கெளரவமாகவும் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெறும் 6வ து கால்பந்து வீரர் என்ற பெருமையும் சுனிலுக்குக் கிடைத்துள்ளது. இந்திய கால்பந்து வீரர்களிலேயே அதிக கோலடித்த சாதனைக்குரியவர் சுனில் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இதற்கு முன்பு கோஸ்தோ பால், சாலியன் மன்னா, பி.கே.பானர்ஜி, சுனி கோஸ்வாமி, பைசுங் பூடியா ஆகிய கால்பந்து ஜாம்பவான்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. விருது குறித்து சுனில் கூறுகையில், இது மிகப் பெரிய கெளரவம். இதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. தொடர்ந்து எனது கடின உழைப்பைக் கொடுப்பேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
2005ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தேசிய அணியில் அறிமுகமானவர் சுனில். பின்னர் 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த நேரு கோப்பையை வென்ற அணியில் முக்கியப் பங்காற்றினார். 2012ல் ஏஎப்சி சாலஞ்ச் கோப்பையும் வென்றார். 2011, 2016ல் சாப் சாம்பியன்ஷிப்பையும் சுனில் இடம் பெற்ற அணி கைப்பற்றியது.
சர்வதேச அளவில் 67 கோல்கள் அடித்து அதிக கோலடித்த கால்பந்து வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையை சுனில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.