நேரில் வாங்க
ஆம்! கடந்த 2018ம் ஆண்டு நான்கு நாடுகள் மோதிய கால்பந்து தொடரின் போது, மிகவும் குறைவான ரசிகர்களே போட்டியை பார்த்தனர். இதனால் வேதனையடைந்த சுனில் சேத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை" என்று உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
தள்ளாடும் இந்தியா
இதைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க, அடுத்த போட்டிக்கு ரசிகர்கள் குவிந்து அரங்கை நிறைத்தனர். ஆனால், மீண்டும் பழைய கதையே அரங்கேறியது. இப்படி பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவின்றி விளையாடுவதால் தான், இந்திய அணியால் சர்வதேச அளவில் பெரும் வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியவில்லை. இப்போது கூட ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற தள்ளாடி வருகிறது இந்திய அணி.
74 கோல்
இந்த நிலையில் தான் ஃபிபா உலகக் கோப்பை 2022 மற்றும் 2023 AFC ஆசிய கோப்பை தொடர்களுக்கான தகுதிச் சுற்று போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. இதில், இரண்டு கோல் அடுத்த சுனில் சேத்ரி, 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணி ஃபிபா உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இந்த இரண்டு கோல்களின் மூலம் உலக அளவில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 74 கோல்களுடன் 2ம் இடத்திற்கு சுனில் முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி அடித்துள்ள மொத்த கோல்கள் 72.
டாப் 5 லிஸ்ட்
இதில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திரம் வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ 103 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரானைச் சேர்ந்த அலி தேய் 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதிக கோல் அடித்த நடப்பு டாப் 5 வீரர்கள்:
கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்சுகல்) - 103 கோல்
சுனில் சேத்ரி (இந்தியா) - 74 கோல்
அலி மப்ஹூத் (ஐக்கிய அரபு அமீரகம்) - 73 கோல்
லயோனல் மெஸ்ஸி (அர்ஜெண்டினா) - 72 கோல்
ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (போலாந்து) - 66 கோல்
2004-ஆம் ஆண்டு 20 வயதினருக்கு உட்பட்ட இந்திய அணியில் சுனில் சேத்ரி இடம்பெற்றார். 2005-ஆம் ஆண்டு சீனியர் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார். 2007, 2011, 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஏ.ஐ.பி.எஃப். சிறந்த வீரருக்கான விருதை ஐந்து முறை சேத்ரி பெற்றுள்ளார்.