கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சாதனையை மச்சான்கள் நிறுத்துவார்களா?
கொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வாழ்வா, சாவா என்ற நிலையில், இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சாதனையை சென்னையின் எப்சி தடுத்து நிறுத்தி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் நான்காவது சீசன் அரை இறுதியை நெருங்கியுள்ளது. அறிமுக அணியான பெங்களூரு எப்சி அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.
மீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி 3-2 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வென்று, 23 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சியும், 5வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

டிராவில் முடிந்த முதல் ஆட்டம்
இரு அணிகளுக்குமே இந்த போட்டி வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. இதற்கு முன் இரு அணிகளும் லீக் போட்டியில் சந்தித்தபோது 1-1 என டிராவில் முடிந்தது. ஆனால், இந்தப் போட்டியில் அது செல்லுபடியாகாது.

கேரளா பிளாஸ்டர்ஸ் சாதனை
கேரளா பிளாஸ்டரஸ் அணி, 16 போட்டிகளில், 6ல் வெற்றி, 6ல் டிரா, 4ல் தோல்வி கண்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளைத் தவிர, மற்ற 14 போட்டிகளிலும் கோல் அடித்துள்ள, தொடர்ந்து, 14 போட்டிகளில் கோல் அடித்த அணி என்ற சாதனையை வைத்துள்ளது.

சாதனை தடுத்து நிறுத்தப்படுமா
அதனால், இன்று நடக்கும் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை கோலடிக்க விடாமல் தடுத்து, அதன் சாதனையை முறியடிப்பதுடன், வெற்றியைப் பெற வேண்டிய நிலையில் சென்னையின் எப்சி உள்ளது.

குறைந்தபட்சம் டிரா தேவை
தற்போதைய நிலையில், 28 புள்ளிகளுடன் சென்னையின் எப்சி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ், 24 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அரை இறுதிக்கான வாய்ப்பை சென்னையின் எப்சி தக்க வைக்க முடியும். அதே நேரத்தில், வென்றால்தான் அரை இறுதி வாய்ப்பு கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு உள்ளது.

சென்னையின் எப்சிக்கு சவால்
கொச்சினில் நடக்கும் இன்றைய போட்டி, கேரளா பிளாஸ்டரஸ் அணிக்கு மிகவும் முக்கியம் என்பதுடன், தொடர்ந்து, 14 போட்டிகளில் கோல் அடித்த சாதனையை நீட்டிக்கு அவர்கள் விரும்புவார்கள். இந்த சவாலை சென்னையின் எப்சி சூப்பர் மச்சான்ஸ்கள் எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications