அர்ஜென்டினாவும், மெஸ்ஸியும்
1987ம் ஆண்டு அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் பிறந்தவர் லயோனல் மெஸ்ஸி. 18 ஆண்டுகளாக களத்தில் மெஸ்ஸி செய்யும் மாயாஜாலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது அவரின் பாட்டி செலியா தான். ஒருமுறை மெஸ்ஸியின் சகோதரர்கள், அவர்களின் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதை மெஸ்ஸி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மெஸ்ஸி தோற்றத்தில் குள்ளமாகவும், மற்றவர்களை விட சிறுவனாகவும் இருந்ததால், அவர் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
ஆதரவாக நின்ற பாட்டி
ஆனால் மெஸ்ஸியை சேர்த்து கொள்ளுங்கள் என்று அவரது பாட்டி தான் அறிவுறுத்தினார். அதன்பின்னர் மெஸ்ஸியின் ஆட்டத்தை பார்த்து அசந்துபோன அவரது பாட்டி, குடும்பத்தினருடன் சண்டைபோட்டு மெஸ்ஸிக்கு ஷூ வாங்கி கொடுத்தார். ஒருமுறை மெஸ்ஸி சகோதரரின் ஆட்டத்தை பார்க்க சென்ற போது, ஆட்டத்தில் பங்கேற்க வேண்டிய ஒரு சிறுவன் வரவில்லை. இதனையறிந்து பாட்டி செலியா, மெஸ்ஸியை சேர்த்துக் கொள்ளுமாறு பயிற்சியாளரிடம் கேட்டுக்கொண்டார்.
மெஸ்ஸியின் முதல் மேஜிக்
ஆனால் மெஸ்ஸி உருவத்தை பார்த்து பயிற்சியாளர் சேர்த்துக் கொள்ள மறுப்பு தெரிவித்தார். ஆனால் பாட்டியின் தொடர் வேண்டுகோளால், மெஸ்ஸியை அணியில் சேர்த்தார் அந்த பயிற்சியாளர். அந்த போட்டியில் ஃபார்வேர்ட் பொசிஷனில் ஆடிய மெஸ்ஸி, அந்த போட்டியில் நிகழ்த்தியது தான் முதல் மேஜிக். மெஸ்ஸியின் காலுக்கு பந்து வந்த போது, எதிரணி சிறுவர்களை கடந்து அசால்டாக மெஸ்ஸி கோல் அடித்ததை பார்த்து மிரண்டே போனார் பயிற்சியாளர்.
மெஸ்ஸியின் சர்ப்ரைஸ்
எந்த உருவத்தை பார்த்து அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று பயிற்சியாளர் கூறினாரோ, இப்போது அதே மெஸ்ஸியை பார்த்து மற்ற வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராட்டினார். இதனிடையே மெஸ்ஸிக்கு 8 வயது இருந்தபோது, நெவல்ஸ் ஓல்ட் பாய்ஸ் என்ற கிளப்பில் இனைந்து, ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான கோல்கள் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
பயிற்சியாளர் சொன்ன பரிசு
ஒருமுறை பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் கோல் அடித்து வெற்றிபெற செய்வோருக்கு, சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்று பயிற்சியாளர் அறிவித்தார். அந்த போட்டியின் போது, எதிர்பாராதவிதமாக மெஸ்ஸி, பாத்ரூமில் மாட்டிக்கொள்ள, மெஸ்ஸி இல்லாமலேயே ஆட்டம் தொடங்கியது. ஆனால் பாத்ரூம் ஜன்னலை உடைத்து கொண்டு முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் மெஸ்ஸி களத்திற்கு வந்தார்.
ஹார்மோன் குறைபாடு
ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் மெஸ்ஸியின் அணி இரண்டு கோல்கள் பின்தங்கியது. பின்னர் மாற்று வீரராக உள்ளே வந்த மெஸ்ஸி, ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்ததோடு, சைக்கிளையும் பரிசாக வென்றார். தொடர்ந்து மெஸ்ஸியின் புகழ் வேகமாக பரவியது. ஆனால் மெஸ்ஸியின் வளர்ச்சிக்கு தடைபோடும் வகையில் பெரும் சோதனை வந்தது. ஹார்மோன் குறைபாட்டால், மெஸ்ஸி வளர்வது கடினம் என்றும், அதனை சரிசெய்ய அதிக பணம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
பார்சிலோனா கிளப்
அப்போது மெஸ்ஸியின் மருத்துவ செலவை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால், மெஸ்ஸியின் திறமையை அறிந்து, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப், அவரது மருத்துவ செலவ ஏற்க முன்வந்தது. இதன் மூலம் 2000ம் ஆண்டில் மெஸ்ஸி பார்சிலோனா சென்று, அங்கு லா மாஸியா எனப்படும் பார்சிலோனா ஜூனியர் டிவிஷன் அணியில் இணைந்தார். அங்கிருந்து திறமையா வேகமாக முன்னேறிய மெஸ்ஸி, 2004-05 சீசனின் போது, எஸ்பான்யோல் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனாவுக்காக அறிமுகமானார்.
முதல் கோல்
பின்னர் மே 1, 2005ம் ஆண்டு பார்சிலோனா அணிக்காக தனது முதல் கோல் பதிவு செய்த மெஸ்ஸி, அடுத்தடுத்து எண்ணில் அடங்காத கோல்களை அடித்து சாதனைகளை படைத்தார். இயற்கையாகவே கால்பந்து விளையாடும் திறமை கொண்ட வீரர்கள், களத்தில் மேஜிக் செய்வது வழக்கமானது தான். ஆனால் மெஸ்ஸியின் மேஜிக், காண்போரை மெய்மறக்க செய்தது.
வானத்தை கைகாட்டுவது ஏன்?
அதேபோல் ஒவ்வொரு முறையும் மெஸ்ஸி கோல் அடிக்கும் போது, இரு கைகளையும் வானத்தை நோக்கி குறிப்பிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அதற்கு காரணம், மெஸ்ஸியின் பாட்டி செலியா தான். தனது வாழ்நாளில் அடிக்கும் ஒவ்வொரு கோலையும் அவரது பாட்டிக்காகவே டெடிகேட் செய்து வருகிறார் மெஸ்ஸி. ஏனென்றால் மெஸ்ஸி கால்பந்து விளையாட்டின் பக்கம் திரும்புவதற்கு முழுமையான காரணம் பாட்டி செலியா தான். இதனை மெஸ்ஸி தனது பேட்டியில் குறிப்பிடும் வரை, மெஸ்ஸி ஏன் வானத்தை நோக்கி குறிப்பிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
18 ஆண்டுகள்
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் யாரும் கற்பனையில் கூட நினைக்க முடியாத சாதனைகளை படைத்தவர். எண்ணில் அடக்க முடியாத அளவிற்கு விருதுகளை கைப்பற்றியவர். சமகால வீரர்களால் ஜாம்பவான் என்று கொண்டாடப்படும் மெஸ்ஸியின் வாழ்க்கையில், உலகக்கோப்பை என்னும் கனவு மட்டும் கைகூடாமலேயே இருந்தது.
மாரடோனா - மெஸ்ஸி
தனது ஆஸ்தான ஹீரோவான மாரடோனாவுடன் கைகோர்த்து வந்தும் மெஸ்ஸியால் அர்ஜென்டினா அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. 2014ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் ஓய்வையே அறிவித்தார். ஆனால் காலம் மெஸ்ஸியை அவ்வளவு எளிதாக விடவில்லை.
மெஸ்ஸி என்னும் மேஜிக்
மீண்டும் இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கினார். ஒவ்வொரு முறையும் ஏராளமான சோதனை கடந்து வந்த மெஸ்ஸி, 35 வயதிலும் கனவை எட்டிபிடிக்க போராடினர். இளம் வீரர்களோடு கைகோர்த்து, அவர்களுக்கு வழிகாட்டியாக நின்று, தேவையான நேரத்தில் கோல் அடித்து, உலகக்கோப்பை வென்று கால்பந்து உலகின் தன்னிகரற்ற ஜாம்பவான் என்று உரக்க கூறியுள்ளார். நினைத்ததை முடிக்க எவ்வளவு காலமானாலும், மெஸ்ஸி என்னும் மேஜிக்கை வரலாற்றில் யாராலும் அழிக்க முடியாது.