உலகக் கோப்பை ரஷ்யாவில் நடக்கிறது... கால்பந்து எங்கு தயாராகிறது தெரியுமா!
டெல்லி: 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் அடுத்த மாதம் துவங்குகிறது. உலகின் தலைச் சிறந்த 32 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் கால்பந்து பல சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யா உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே பல நாடுகளில் உலகக் கோப்பை ஜூரம் தொற்றிக் கொண்டுள்ளது. ரஷ்யாவில் மைதானங்கள் தயாராகி வருகின்றன. வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உலகக் கோப்பையில் பயன்படுத்தப்படும் அடிடாஸ் டெல்ஸ்டார் 18 என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்பெஷல் கால்பந்து பயன்படுத்தப்பட உள்ளது. டிவியில் பார்க்கும்போது, பந்து எங்கு உள்ளது என்பது தெளிவாக தெரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அதில் சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி பந்து எங்கு உள்ளது என்பதை மொபைலில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.
1970ல் நடந்த உலகக் கோப்பையில் இருந்துதான், அடிடாஸ் நிறுவனம், கால்பந்துகளை தயாரித்து அளித்து வருகிறது. அந்த உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட கால்பந்தின் பெயர் டெல்ஸ்டார். தகவல் ஒலிபரப்புக்காக நாசா அனுப்பிய டெல்ஸ்டார் செயற்கைக்கோளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தினாலானது இந்த கால்பந்து. தற்போது 2018 உலகக் கோப்பைக்குக்கு பயன்படுத்தும் பந்துக்கு டெல்ஸ்டார் 18 என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்தக் கால்பந்துகளை, பாகிஸ்தானில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள சியால்கோட் நகரில் உள்ள அடிடாஸ் நிறுவனத்துக்கு கால்பந்துகளை தயாரித்து தரும் பார்வர்டு ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
2014 உலகக் கோப்பைக்கும் இந்த நிறுவனமே கால்பந்துகளை தயாரித்து தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பைக்கு எவ்வளவு கால்பந்துகள் தயாராகின்றன என்ற தகவல் இல்லை. ஆனால், மாதத்துக்கு 7 லட்சம் கால்பந்துகளை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
வழக்கமாக கால்பந்துகள், கைகளால் தைக்கப்படும். ஆனால் இந்த உலகக் கோப்பைக்கான கால்பந்துகள் தெர்மோ முறையில் சூடேற்றப்பட்டு ஒட்ட வைக்கப்பட்டுள்ளன. 2014லும் இந்த முறையில் தயாரிக்கப்பட்ட பந்துகளே பயன்படுத்தப்பட்டன.
1990 முதல் 2010 வரை நடந்த உலகக் கோப்பைகளுக்கு கைகளால் தைக்கப்பட்ட கால்பந்துகளை பாகிஸ்தான் அளித்து வந்தது. உலகிலேயே அதிக அளவு கால்பந்து பாகிஸ்தானில்தான் தயாராகிறது. சியால்கோட் பகுதியில் ஆண்டுக்கு 3 கோடி பந்துகள் ,தயாரிக்கப்படுகின்றன. இது உலக அளவில் தயாரிக்கப்படும் பந்துகளில் 40 சதவீதமாகும்


Click it and Unblock the Notifications