உலக கோப்பை ஹாக்கி தொடர் கோலாகல தொடக்கம்.. 48 ஆண்டுகள் கனவு சாத்தியமாகுமா? விழாக்கோலம் பூண்ட ஓடிசா
கட்டாக் : 15 ஆவது ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இதனை ஒட்டி தொடக்க விழா என்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனாக பெல்ஜியம் அணி களமிறங்குகிறது. முதல்முறையாக இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நடத்துகிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக ரோர்கேலா என்ற நகரத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை ஒடிசா அரசு கட்டி இருக்கிறது.

48 ஆண்டுகள்
இதில் மொத்தம் 20 போட்டிகளும், கலிங்காவில் உள்ள மைதானத்தில் 24 போட்டிகள் நடைபெறும்.16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி கடைசியாக 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு 48 ஆண்டுகள் எந்த ஒரு பட்டத்தையும் வெல்லவில்லை. அதாவது டாப் நான்கு இடத்தில் கூட இந்தியா பிடிக்கவில்லை.

தொடர்ந்து 2வது முறை
இதனால் இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் களமிறங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணியில் பி ஆர் ஸ்ரீஜேஸ் மன்பிரீத் சிங் உள்ளிட்ட திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2021 ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கல பதக்கம் வென்றது. இதனால் இம்முறை இந்தியா அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழா
இந்த நிலையில் ஒடிசாவில் கட்டாக் நகரில் இன்று கோலாகல தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான நடனங்கள் மற்றும் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், திஷா பத்தாணி ஆகியோர் பங்குபெற்ற கலை நிகழ்ச்சியும் நடந்தது.

பாலிவுட் நட்சத்திரங்கள்
பிரபல பாலிவுட் பாடகர் பிரத்தாம், ஹாக்கி உலகக் கோப்பைக்காக ஹாக்கி ஹே தில் மேரா என்ற பாடலை 11 பாடகர்கள் இணைந்து இணைந்து பாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் பல்வேறு பிரபல பாலிவுட் பாடல்கள் இந்த கலை நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டன. இந்தத் தொடக்க விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் தற்போது ஹாக்கியின் உலக கோப்பை நடைபெறுகிறது.

இந்தியாவின் பிரிவு
16 அணிகள் மொத்தம் நான்கு பிரிவுகளாக இந்த தொடரில் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்குச் செல்லும். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணி மீண்டும் ஒருமுறை மோதி, அதில் வெல்லும் அணி காலிறுதியில் எஞ்சியுள்ள இடத்தை பிடிக்கும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வரும் 13-ஆம் தேதி மாலை ஸ்பெயினுடன் பலப் பரிட்சை நடத்துகிறது. டி பிரிவில் இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின்,இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications