டெல்லி: உலக மகளிர் ஹாக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் போலந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த உலக மகளிர் ஹாக்கி போட்டியில், நேற்று நடந்த இறுதி சுற்று சுற்று ஆட்டத்தில் இந்திய அணியும், போலந்து அணியும் மோதின.
மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 4 கால்பாகமாக நடைபெற்ற ஆட்டத்தில், மூன்று கால் பாகங்களில் கோல் அடித்த இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.
முதல் கால்பாகத்தில் இறுதி கட்டமான 15வது நிமிடத்தில் அற்புதமான கோல் அடித்தார் வந்தனா கட்டாரியா. இதற்குப் பதிலடி தரும் விதமாக 2வது கால் பாகம் தொடங்கியவுடன் போலந்தும் ஒரு கோலை அடித்தது. அந்த அணியின் ஓரியானா வலாசெக் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 17வது நிமிடத்தில் அற்புதமான கோலை அடித்தார்.
2வது கால்பாகத்தில் இந்தியா கோல் எதுவும் போடாத நிலையில், 3வது கால்பாகத்தில் 44வது நிமிடத்தின் போது ராணி அற்புதமான கோல் அடித்தார். தொடர்ந்து 4வது கால்பாகத்தில் இந்திய அணியின் கேப்டனும், சர்வதேச அளவில் 200வது போட்டியில் விளையாடுபவருமான ரித்து ராணி 59வது நிமிடத்தில் அருமையான கோலை அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.