பெல்ஜியம்: சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பிரான்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதி போட்டி அன்ட்வர்ப் நகரில் நடைபெற்றது. இதில் "ஏ" பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலக அளவில் 18-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது.
ஏற்கனவே, ஜப்பானுக்கு எதிரான தொடர் உள்பட சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இந்திய அணி கேப்டன் சர்தார் சிங் தலைமையில் ஆக்ரோஷத்துடன் களமிறங்கியது.
2016- ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெறும் போட்டி என்பதால் அதிக கவனத்துடனேயே இந்திய அணி விளையாடியது. பரபரப்பாக துவங்கிய ஆட்டத்தில் 3-வது நிமிடத்திலேயே பிரான்ஸின் ஆலிவர் சான்செஸ் ஒரு கோலை போட்டார்.
இதையடுத்து, 8-வது நிமிடத்தில் இந்திய வீரர் அக்ஷத்தீப் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் லாவகமாக தடுத்ததால் இந்தியாவின் கோல் முயற்சி தோற்றது. முதல் கால் பகுதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்த நிலையில் மீண்டும் ஒரு கோல் போடும் வாய்ப்பை தவறவிட்டது பிரான்ஸ் அணி.
இதையடுத்து, பிரான்ஸ் 1-0 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். அப்போது இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் கோல் போட முடியவில்லை.
எனினும், அடுத்து கிடைத்த பெனால்டி கார்னரை இந்திய வீரர் மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். அதைதொடர்ந்து, தேவேந்தர் வால்மிகீ மற்றொரு கோலை போட இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.
இந்நிலையில், மீண்டும் பிரான்ஸ் அணியின் மார்டின் சைமன் ஒரு கோல் போட 2-2 என சமநிலை பெற்றது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்களே இருந்த தருணத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது.
இந்திய வீரர் ரமன்தீப் 3-வது கோலை அடித்தார். இதையடுத்து இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது.