கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது
டெல்லி: பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான், அடுத்ததாக ஹாக்கியில் மோத உள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஓமன் நாட்டின் மஸ்கட்டில் நடக்க உள்ளது. ஆறு நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. ஆனால், அதற்கு இன்னும் 8 மாதங்கள் காத்திருக்கணும்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இந்தாண்டு மஸ்கட்டில் நடக்கிறது. வரும் அக்டோபர் 18 – 28 வரை நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகளுடன், ஓமனும் விளையாடுகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. கடந்த ஆண்டு டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியின் போது இரு அணிகளும் அரை இறுதியில் மோதின. அதில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி தொடர்கள் ஏதும் நடக்காத நிலையில், இரு அணிகளும் மோதும் ஆட்டங்கள் எப்போதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
கடந்தாண்டு லண்டனில் நடந்த உலக ஹாக்கி லீக் அரை இறுதி சுற்று ஆட்டங்களின்போது, இரு அணிகளும் மோதின. அதில் லீக் ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. பின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்தாண்டு நவம்பரில் ஒடிசாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியா, பாகிஸ்தான், மலேசியா அணிகளுக்கு, இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மிகச் சிறந்த பயிற்சியாக அமையும்.
Story first published: Thursday, February 1, 2018, 11:09 [IST]
Other articles published on Feb 1, 2018


Click it and Unblock the Notifications