லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றின் காலிறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வியடைந்தது.
ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்று தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. போட்டி துவங்கிய 19 மற்றும் 20 நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் மலேசியா அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தது.
இதையடுத்து இந்திய அணி 24, 26 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து சமன் செய்தது. இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. மலேசியாவுக்கு 48 நிமிடத்தில் மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய கோலாக மாற்றினார் அந்த அணியின் ரஹிம்.
இதனைத் தொடர்ந்து மலேசியா முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் போராடியும் இறுதி வரை கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறியது.