டெல்லி: இந்திய ஹாக்கி அணி கடந்த சில ஹாக்கி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதை தொடர்ந்து தற்போது ஹாக்கி தரவரிசையில் ஐந்தாம் இடம் பெற்று அசத்தி உள்ளது.
அடுத்து வரும் ஏசியன் கேம்ஸ் மற்றும் உலகக்கோப்பை தொடர்களில், சிறப்பாக செயல்பட இந்த தரவரிசை முன்னேற்றம் ஊக்கமளிக்கும் என கூறியுள்ளார், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ்.
இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தரவரிசையில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன் ஐந்தாம் இடத்தில் இருந்த ஜெர்மனி ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் நான்கு இடங்களில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.
இந்த முன்னேற்றம் குறித்து கூறிய இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ், "நாங்கள் ஆறாம் இடத்தில இருந்து தரவரிசையில் ஒரு படி முன்னேறி உள்ளோம். மேலே செல்லச் செல்ல, எங்கள் பொறுப்பு அதிகரிக்கிறது. நங்கள் தொடர்ந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அடுத்து வரும் ஏசியன் கேம்ஸ் மற்றும் உலகக்கோப்பைக்கு, இந்த தரவரிசை முன்னேற்றம் மிகப் பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் நாங்கள் வெற்றி பெற்று மேடையேற விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
மேலும் அவர், "நீங்கள் தரவரிசையில் மேலே சென்றால், அனைவரும் உங்களை உற்று நோக்குவார்கள். அவர்களின் தொடர்ந்த கண்காணிப்பு வட்டத்தில் நாம் இருப்போம். தரவரிசையில் தொடர்ந்து முன்னேற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் தகுதி உள்ளது என் நான் நம்புகிறேன். ஆனால், அதற்கு நாங்கள் தொடர்ந்து வரும் தொடர்களில் சிறப்பாக ஆட வேண்டும்" என குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்கள் முன்பு நெதர்லாந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், இந்திய அணி இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுடன் நடந்த இறுதிப் போட்டியில், இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற சம அளவில் நின்றது. பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றால் கோப்பையை கைப்பற்றலாம் என்ற நிலையில், இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பெனால்டி வாய்ப்பில் கோட்டை விட்டது. எனினும், தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய இந்திய அணி, தற்போது தரவரிசையில் முன்னேறி உள்ளது.