ஹாக்கியின் ராணி 200 போட்டிகளில் விளையாடி சாதனை
சியோல்: தென் கொரியாவுக்கு எதிரான 5 போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியின்போது, கேப்டன் ரீது ராணி புதிய சாதனையைப் படைத்தார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி, 5 போட்டித் தொடரில் விளையாட தென் கொரியா சென்றுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கி்ல வென்று, தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டி, இந்திய அணியின் கேப்டன் ரீது ராணியின் 200வது சர்வதேசப் போட்டியாகும். 26 வயதாகும் ரீது 2008ல் முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். ஹரியானாவின் குருஷேத்திரா மாவட்டத்தின் ஒரு சிறிய டவுனில் பிறந்த அவர், 2003ல், தனது 12 வயதில், முதல் முறையாக போட்டிகளில் களமிறங்கினார்.
பார்வர்டு வீரரான இவர், 2010 காமன்வெல்த் போட்டி, 2010 ஆசியப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010ல், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் மகளிர் ஆல் ஸ்டார் அணியில் இடம்பிடித்தார்.
மேலும், 2010ல் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் ஆல் ஸ்டார் அணியிலும் அவர் இடம்பிடித்தார். 2009ல் ஆசியக் கோப்பை போட்டியில் வெள்ளி வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். 2010 உலகக் கோப்பை போட்டியில் ஏழு கோல்கள் அடித்து, அசத்தினார்.
அவருடைய தலைமையிலான இந்திய அணி, கடந்தாண்டு ஆசியக் கோப்பையை வென்றது. மேலும், 36 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி விளையாடியது.
தென்கொரியாவுக்கு எதிரான நேற்றைய போட்டி, மற்றொரு வீராங்கனையான மோனிகாவுக்கு, 100வது போட்டியாகும்.


Click it and Unblock the Notifications