ரியோ டி ஜெனிரோ: 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி இந்திய ஆண்கள் அணி சாதனை படைத்துள்ளது.
பிரேசிலின் டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோலாகலமாக துவங்கிய விளையாட்டு திருவிழாவில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கியுள்ளது.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பின்னர் அர்ஜென்டினாவுடன் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை ருசித்தது.
இந்நிலையில் இன்று வலிமையான நெதர்லாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.
3-வது காலிறுதி ஆட்டத்தில் ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் (31:43) நெதர்லாந்து அணிக்கு ஷாட் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்நாட்டு வீரர் ரோஜியர் ஹாஃப்மன் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ரகுநாத் வக்காலிகா ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.
அதன்பின் நெதர்லாந்து வீரர்களை கோல்கள் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் அபாரமான முறையில் தடுத்தார்கள். ஆனால், ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருக்கும் நிலையில் நெதர்லாந்து வீரர் வான் டெர் கோல் அடித்தார். இதனால் 2-1 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடியும் கடைசி வினாடியில், இந்தியாவிற்கு ஷாட் பெனால்டில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதனால் நெதர்லாந்து அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அர்ஜென்டினா- ஜெர்மனி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா(4-4) ஆனது. இதனையடுத்து இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு, 1980ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்தது.