பம்மிய ஹீரோக்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, விளையாடிய வீரர்களுக்கே பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில், அத்தனை பாஸிட்டிவ் இண்டென்ட்டுடன் களமிறங்கியது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இதில், ரோஹித் தொடங்கி டாப் வீரர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு சொதப்பினார்கள். இளம் வீரர் ஷுப்மன் கில், கேப்டன் கோலி, புஜாரா, ஜடேஜா, ரிஷப் பண்ட் என்று யாரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. உண்மையில் பயந்து பயந்து விளையாடியது போல் தான் இருந்தது.
நிலைமை படுமோசம்
ஒரு பக்கம் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், அவர்களுக்கு இணையாக பவுலர்களும் போட்டிப் போட்டனர். முதல் இன்னிங்ஸில் ஷமி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியதைத் தவிர, வேறு எந்தவொரு தாக்கத்தையும் இந்திய பந்துவீச்சில் பார்க்க முடியவில்லை. உலகின் டாப் பவுலர்களில் ஒருவராக கருதப்படும் பும்ராவின் நிலைமை படுமோசம். ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. (புஜாரா ஒரு கேட்சை விட்டதனால்). அவரது பவுலிங்கிலும் எந்த தாக்கமும் இல்லை. எந்த இடத்திலும் அவர் நியூசிலாந்து பவுலர்களை சோதிக்கவில்லை. ரசிகர்களைத் தான் சோதித்தார்.
வாய்ப்பில்ல ராஜா
அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் பவுலர் இஷாந்திடமும் இருந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. பந்தில் ஓரளவு ஸ்விங் இருந்தது. ஆனால், அதனால் நியூசி., பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்களா என்றால் "வாய்ப்பில்ல ராஜா". ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை அவர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை.
விக்கெட் டேக்கர்
இந்த நிலையில் தான், அடுத்து துவங்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கெதிரான இந்திய அணியில் முகமது சிராஜை அணியின் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இளம் வீரராக இருந்தாலும், சிராஜால் அதிகம் ஸ்விங் செய்ய முடியும் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்றனர். அதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இஷாந்தின் பந்துவீச்சில் இன்டென்ட் இல்லாததால், அவருக்கு பதில் சிராஜை சேர்க்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்தாண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் லீடிங் விக்கெட் டேக்கர் சிராஜ் தான்.
தேடி வரும் வாய்ப்பு
wtc ஃபைனலில் இஷாந்துக்கு தான் வாய்ப்பளிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டியவர்களே, இப்போது சிராஜை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறுவது தான் ஹைலைட். அதுமட்டுமல்ல, இஷாந்துக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதால், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சிராஜை தேடி மீண்டும் டெஸ்ட் வாய்ப்பு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவுள்ளது.