|
12 நகரங்களில் விழாக்கோலம்
புரோ கபடி போட்டிகள் சென்னை, ஹைதராபாத், மும்பை, நாகபுரி, அகமதாபாத், டெல்லி, ராஞ்சி, கொல்கத்தா, அரியாணா, லக்னெள, ஜெய்ப்பூர், புனே என 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த நகரங்களில் கபடி மைதானங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
கோலாகல தொடக்க விழா
புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக, வெகு விமர்சையாகச் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் தலைவாஸ்
இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், குருசாய் தத், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், அல்லு அரவிந்த், ராம்சரண், ராணா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
தேசிய கீதம்
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அக்ஷய் குமார் தேசிய கீதம் பாடுகிறார். போட்டி நடைபெறும் 12 நகரங்களிலும் தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ - பிரிவு அணிகள்
புரோ கபடி போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டான், யு-மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி- பிரிவு அணிகள்
பி- பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யு.பி.யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோதும்.
ஆட்ட விவரங்கள்
அதன்பிறகு 'ஏ' பிரிவில் உள்ள ஒவ்வொரு அணியும், 'பி' பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன்பிறகு இரு பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஓர் ஆட்டத்தில் மோதும்.
சூப்பர் பிளே ஆஃப்
குரூப் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதில் 3 தகுதிச் சுற்றுகள், இரண்டு வெளியேற்றும் சுற்றுகள் மற்றும் இறுதி ஆட்டம் என மொத்தம் 6 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
3வது தகுதிச் சுற்று
இரு பிரிவுகளிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் 3- வது தகுதிச்சுற்றில் விளையாட தகுதி பெறும். அதில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பளிக்கப்படும். அதாவது அந்த அணி 2-வது வெளியேற்றும் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும்பட்சத்தில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறலாம்.
2வது தகுதிச் சுற்று
'ஏ' பிரிவில் 2-வது இடம்பிடிக்கும் அணியும், 'பி' பிரிவில் 3-வது இடம்பிடிக்கும் அணியும் முதல் தகுதிச் சுற்றில் மோதும். 'ஏ' பிரிவில் 3-வது இடம்பிடிக்கும் அணியும், 'பி' பிரிவில் 2-வது இடம்பிடிக்கும் அணியும் 2-வது தகுதிச் சுற்றில் மோதும்.
இறுதி ஆட்டம் சென்னையில்
மேற்கண்ட இரு தகுதிச் சுற்றில் வெல்லும் அணிகள், முதல் வெளியேற்றும் சுற்றில் விளையாட தகுதி பெறும். அதில் வெல்லும் அணி 2-ஆவது தகுதிச்சுற்றில் பங்கேற்க தகுதி பெறும். இறுதி ஆட்டம் அக்டோபர் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.