புரோ கபடி லீக் சீசன் 6.... ரூ. 1 கோடிக்கு ஏலம் போன 6 வீரர்கள்!
Recommended Video

மும்பை: ஐந்து சீசன்கள் முடிந்து, ஆறாவது சீசன் துவங்க உள்ள நிலையில், புரோ கபடி லீக் போட்டிக்கான மவுசு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாளில், 6 வீரர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட்டுக்கு ஐபிஎல், கால்பந்து ஐஎல்எஸ் போன்றவை ஏற்கனவே மிகவும் பிரபலமடைந்துள்ளன. வீரர்கள் தேர்வு, ஆட்டங்கள், ஒளிபரப்பு என இந்த விளையாட்டுகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு சீசனுக்கு சீசன் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், கபடிக்காக நடத்தப்படும் புரோ கபடி லீக், ஆறாவது சீசன் அக்டோபர் 19ம் தேதி துவங்குகிறது. தமிழ் தலைவாஸ் உள்பட 4 புதிய அணிகள் கடந்த சீசனில் அறிமுகமாகியின. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் சீசன் 6-க்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நேற்று துவங்கியது.
5வது சீசனில் விளையாடிய வீரர்களில், 9 அணிகள் 21 பேரை தக்க வைத்துள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி, கேப்டன் அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி அருண் ஆகிய மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது.
58 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 422 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில் முதல் நாளான நேற்று மட்டும் 6 வீரர்கள், தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் இந்தியர்கள்.

மோனு கோயத்
ரைடரான மோனு கோயத், புரோ கபடி லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராகியுள்ளார். நடப்பு சாம்பியனான பட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடிய மோனு கோயத்தை ரூ.1.51 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

ராகுல் சவுத்ரி
மிகச் சிறந்த ரைடரான ராகுல் சவுத்ரி விளையாடும் ஆட்டங்களுக்கு எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. தெலுகு டைடன்ஸ் அணி ரூ.1.28 கோடிக்கு அவரை தக்க வைத்துள்ளது.

நிதின் தோமர்
புரோ கபடி லீகில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனை, கடந்த சீசனில் இவருக்கு உண்டு. யுபி யோத்தா அணி ரூ.93 லட்சத்துக்கு அவரை ஏலம் எடுத்திருந்தது. தற்போது புனேரி பல்தான் அணி ரூ.1.15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

தீபக் நிவாஸ் ஹூடா
புனேரி பல்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஹூடாவை அந்த அணி தக்க வைக்கவில்லை. அதே நேரத்தில் ஆல்ரவுண்டரான ஹூடாவை, பட்னா பைரேட்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ரிஷாங்க் தேவாடிகா
நாட்டின் தலைச்சிறந்த ரைடர்களில் ஒருவரான தேவாடிகாவுக்கு, பல அணிகள் போட்டி போட்டன. மிகவும் கடுமையாக நடந்த ஏலத்தில், முதல் விருப்பம் என்ற அடிப்படையில் ரூ.1.11 கோடிக்கு யுபி யோத்தா அணி தக்க வைத்தது.

பசல் அட்ராசலி
ஈரானைச் சேர்ந்த பசல் அட்ராசலிதான் புரோ கபடி லீக்கில் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரராவார். சிறந்த தடுப்பாட்டக்காரரான அவருக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. யு மும்பா அணி ரூ.1 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது.


Click it and Unblock the Notifications