கணவரை பறித்த கொரோனா.. கையில் 5 மாத குழந்தை.. "சாம்பியன்" வீராங்கனைக்கு கைக்கொடுத்த அரசு
டெல்லி: கொரோனாவால் தனது இளம் கணவனை இழந்த இந்திய கபடி வீராங்கனைக்கு நிதியுதவி வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் கோரத்தாண்டாவத்தில் சிக்கி எண்ணற்றோர் பலியாகி வருகின்றனர். நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,194 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி, கொரோனா தாக்குகிறது.

கணவருக்கும் கொரோனா
இந்த நிலையில் தான் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. 2010 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியில் அங்கம் வகித்தவர் தேஜஸ்வினி பாய். கர்நாடகாவைச் சேர்ந்த தேஜஸ்வினி, அர்ஜூனா விருதும் பெற்றவர். மே மாத தொடக்கத்தில், இவருக்கும் கணவர் நவீனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ரூ.2 லட்சம்
இதைத் தொடர்ந்து, தேஜஸ்வினி பாய் சிகிச்சைக்கு பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிட்டார். ஆனால் அவரது கணவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11-ம் தேதி மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்புக்கு ஆளானது மட்டுமின்றி, கணவரையும் பறிகொடுத்த தேஜஸ்வினி பாய்க்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்பட விளையாட்டு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதனை ஏற்று தேஜஸ்வினி பாய்க்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய நல நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

5 மாத குழந்தை
இது குறித்து தேஜஸ்வினி பாய் கூறுகையில், 'எனது கணவருக்கு 30 வயது தான். அவருடைய தந்தை இறந்ததை அடுத்து அதிக அச்சம் அடைந்தார். பயமும், அழுத்தமும் அவரது உயிரை பறித்து விட்டது. இந்த நிதியுதவியை நான் எதிர்பார்க்கவில்லை. விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இந்த உதவியை எனக்கு வழங்க உடனடியாக முடிவு எடுத்து இருக்கின்றன. என்னை போல் பலரும் நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களுக்கும் முறையான உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். எனது 5 மாத பெண் குழந்தையை பராமரிப்பதுடன், இதில் இருந்து அவளது வருங்கால தேவைக்கு பணமும் முதலீடு செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு உதவி
விளையாட்டு வீரர்களுக்கு என்று வழங்கப்படும் இந்த உதவித் தொகைக்கு Pandit Deendayal Upadhyay National welfare Fund அனுமதி அளித்துள்ளது. நோய்த் தொற்று காலங்களில் போது முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த நலச்சங்கம் செயல்படுகிறது. இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் MYAS ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பில் இது இயங்குகிறது.


Click it and Unblock the Notifications