ஜகார்த்தா : நேற்று பத்தாம் நாள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.வி.சிந்து, ஹீமா தாஸ், உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு நிலவியது. அவர்கள் வெள்ளி மட்டுமே வென்றனர். அதிகம் அறியப்படாத மன்ஜித் சிங் ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று நேற்று இந்தியாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
யார் இந்த மன்ஜித் சிங்?
தங்கம் வென்ற மன்ஜித் சிங் ஹரியானா மாநிலத்தில், உஜ்ஹானா என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு நிரந்தர வேலை இல்லை. அரசு எண்ணெய் (ONGC) நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக நிரந்தரமில்லாத பணியில் இரண்டு வருடம் பணியாற்றி இருக்கிறார். பல முறை மாநில அரசு வேலைக்கு விளையாட்டு இட ஒதுக்கீட்டில் முயற்சி செய்தும், அவருக்கு கிடைக்கவில்லை.
மன்ஜித் சிங் பற்றி பேசிய அவர் தந்தை ரந்திர் சிங், "அவர் தேசிய விளையாட்டு கல்வி நிலையத்தில் பயிற்சி செய்தார். வருடத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார். அப்போது எனக்கு உதவியாக விவசாயத்தையும், ஆடு, மாடுகளையும் பார்த்துக் கொள்வார். மாநில அரசு பல முறை முயற்சி செய்தும் அவருக்கு வேலை அளிக்கவில்லை. இனிமேல், அவர்கள் வேலை அளிக்க மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன்" என கூறினார்.
மன்ஜித் சிங்குக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. ஆனால், பயிற்சிகள் காரணமாக தன் குழந்தையை கூட அவர் இன்னும் காணவில்லை என கூறுகிறார் அவர் மனைவி.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
மஞ்சித் சிங்கின் தந்தை ரன்வீர் சிங் ஒரு மாநில அளவில் ஷாட் புட் போட்டிகளில் பங்கேற்றவர். அவரைப் பார்த்துதான் மன்ஜித் தடகள அரங்கில் நுழைந்துள்ளார். தற்போது அடுத்து 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதிலும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.