குருவாயூர்: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்படாத நிலையில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நிச்சயம் தாம் விளையாடுவேன் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பிக்ஸிங் புகாரில் சிக்கி சிறைக்குப் போனதற்காக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு ஸ்ரீசாந்த், சாண்டிலா உள்ளிட்டோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பான வழக்கில் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனைத் தொடர்ந்து தம்மை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஸ்ரீசாந்த் வலியுறுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக கேரளா கிரிக்கெட் சங்கமும் அனைத்து லாபிகளிலும் இறங்கியுள்ளது. அதேபோல் கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் ஸ்ரீசாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் குருவாயூரில் செய்தியாளர்களிடம் ஸ்ரீசாந்த் கூறியதாவது:
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். இன்றோ அல்லது நாளையோ என் மீதான தடை நீக்கப்படாவிட்டாலும் கூட நிச்சயம் தடை நீங்கும்.
நிச்சயமாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக நான் விளையாடுவேன். அது முடியாமல் போனால் குறைந்தபட்சம் கேரளா கிரிக்கெட் அணிக்கா நான் விளையாடுவேன்.
இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.