கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் பளுதூக்குதலில் பங்கேற்ற இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். இரண்டு தங்கம், ஒரு வெள்ளியை வென்றுள்ள நிலையில், 18 வயது சிறுவனான தீபக் லேதர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், 21வது காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார். இரண்டாவது நாளான இன்று, மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில், மணிப்பூரின் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், இந்தியா இதுவரை 2 தங்கம், 1 வெள்ளி வென்றுள்ளது.

இன்று நடந்த ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில், 295 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார் 18 வயதாகும் தீபக் லேதர். இவர் ஸ்னாட்ச் பிரிவில் 136 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 159 கிலோவும் தூக்கினார். இதன் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. அனைத்தும் பளுதூக்குதலில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த லேதர், முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று, அதில் பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.
இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கத்துடன் சாதனை படைத்தவரான லேதர், இன்று ஸ்னாட்ச் பிரிவில் முதல் இரண்டு வாய்ப்புகளில் 132 மற்றும் 136 கிலோ எடையைத் தூக்கினார். மூன்றாவது வாய்ப்பில் 138 கிலோவை தூக்க முடியாமல் திணறினார்.
கிளீ்ன் அண்ட் ஜெர்க் பரிவில் , இவரைவிட மேலும் 6 பேர் அதிக எடையை தூக்கியிருந்தனர். இரண்டாவது வாய்ப்பில் 159 கிலோவை தூக்கினார். இதன் மூலம், 157 கிலோ தூக்கிய தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். கடைசி வாய்ப்பில் 162 கிலோ தூக்க முயன்று தோல்வியடைந்தார். இருப்பினும் ஒட்டுமொத்தமாக 295 கிலோ தூக்கி, வெண்கலம் வென்றார்.