ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தடகள வீரர் தரம்பிர்சிங்... ரியோ செல்ல தடை... 36 ஆண்டு கனவு தகர்ந்தது
டெல்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இந்திய தடகள வீரர் தரம்பிர்சிங்கிற்கு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில், இந்தியாவில் இருந்து 118 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அதன்படி, ரியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தார் இந்திய தடகள வீரர் தரம்பிர்சிங்.

தரம்பிர்சிங்...
கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த இந்திய கிராண்ட்பிரி தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 20.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார் ஹரியானைவைச் சேர்ந்த 27 வயது தரம்பிர்சிங்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு...
இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு உரியவரானார் அவர்.

ஊக்கமருந்து சர்ச்சை...
இந்நிலையில், திடீரென ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார் தரம்பிர்சிங். அதனைத் தொடர்ந்து தரம்பிர்சிங்கிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியினர் (நாடா) ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது.

தடை...
இதனால் நேற்று முன்தினம் பிரேசிலுக்கு புறப்பட்டு செல்ல இருந்த தரம்பிர்சிங்குக்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. நாளை ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய வீரர் ஒருவர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

8 ஆண்டுத் தடை?
ஊக்கமருந்து சோதனையில் தரம்பிர்சிங் சிக்குவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2012-ம் ஆண்டில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார் தரம்பிர்சிங். அப்போது ஊக்க மருந்து சோதனைக்கு உட்படாமல் தவிர்த்து சர்ச்சையில் சிக்கியதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தரம்பிர்சிங் மீண்டும் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இருப்பதால் அவருக்கு 8 ஆண்டு காலம் வரை தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications