சென்னை திரும்பிய ஆனந்த்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக ஜெர்மனியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த், கடந்த மாதத்தில் நாடு திரும்பினார். முதலில் ஒரு வாரம் பெங்களூருவிலும், பின்னர் சென்னையிலும் தனிமைப்படுத்தப்பட்ட அவர், கடந்த வாரத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்தார்.
கொரோனாவுடனான போராட்டம்
இந்நிலையில் தற்போது கிராண்ட் மாஸ்டர் சூர்ய சேகர் கங்குலியுடன் ஆன்லைன் உரையாடலில் ஈடுபட்ட விஸ்வநாதன் ஆனந்த், பல்வேறு விஷயங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கணினியுடன் செஸ் போட்டிகளை விளையாடுவது போல தற்போது கொரோனாவுடன் போராடி வருவதாகவும், அதனிடம் எந்த ஈவு இரக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து தாக்கும் கொரோனா
கணினியுடன் விளையாடும்போது, நாம் சிறப்பாக விளையாடுவதாகவும், எதிராளி நெருக்கடியில் உள்ளதாகவும் நாம் நினைப்போம். ஆனால், அவ்வாறு இல்லாமல், கணினி தன்னுடைய விளையாட்டை தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும். அதேபோல தான் மாஸ்க் மற்றும் மற்றவர்களுடனான தொடர்பை நாம் துண்டித்தாலும், கொரோனா நம்மை தாக்க வாய்ப்புள்ளது என்று ஆனந்த் கூறியுள்ளார்.
ஆன்லைன் போட்டிகளுக்கு வாய்ப்பு
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக செஸ்ஸிலும் பல்வேறு சோதனைகளை செயல்படுத்தி பார்க்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார். செஸ் தொடர்களில் சில ரவுண்டுகள் முடிக்கப்படாமலேயே உள்ளதாகவும் அதை தற்போது முயற்சி செய்து பார்க்க நேரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ஆன்லைனில் செஸ் போட்டிகளை சிறப்பாக விளையாடவும் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.