லண்டன்.. மின்னல் வேகத்தில் போன கார்... நொடி இடைவெளியில் விபத்திலிருந்து தப்பிய கவாஸ்கர்!
லண்டன்: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், லண்டனில் காரில் போய்க் கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக சின்னக் காயம் கூட இல்லாமல் தப்பினார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதற்காக கிரிக்கெட் வர்னணைக்காக கவாஸ்கரும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து, கவாஸ்கர் ஜாகுவார் ரக கார் ஒன்றில் மான்செஸ்டர் நகரிலிருந்து லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதி வேகத்தில் போன கார்
கவாஸ்கரும், அவரது லண்டன் நண்பர் சந்திரேஷ் படேல், இங்கிலாந்து டிவி வர்னணையாளர் மார்க் நிக்கோலஸ் ஆகியோரும் அந்தக் காரில் பயணித்தனர். கார் படு வேகமாக போய்க் கொண்டிருந்தது.

சரியான மழை
அப்போது சரியான மழையும் பெய்து கொண்டிருந்தது. கன மழையில் எதிர் வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாத நிலையில் சாலை இருந்தது.

திடீரென எதிரே வந்த வாகனம்
அப்போது கவாஸ்கர் பயணித்துக் கொண்டிருந்த காருக்கு எதிரே ஒரு வாகனம் திடீரென குறுக்கிட்டு வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவாஸ்கர் காரின் டிரைவர் படு வேகமாக காரை வலது பக்கமாக திரும்பியதால் கார் பெரும் விபத்திலிருந்து தப்பியது.

பயந்து போன கவாஸ்கர்
சில நொடி நேரத்தில் உயிர் தப்பியதை அறிந்து கவாஸ்கரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், கடவுளே.. கடவுள்தான் எங்களைக் காப்பாற்றினார். கார் படு வேகமாக போய்க் கொண்டிருந்தது. நல்ல வேளையாக யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை. மிக மிக அச்சுறுத்தலாகப் போய் விட்டது என்றார்.

காரை விட்டு இறங்கி ரயிலில் பயணம்
இந்த விபத்தைத் தொடர்ந்து கார் பயணத்தைக் கைவிட்ட கவாஸ்கரும் மற்றவர்களும், ரயில் மூலம் லண்டனுக்குக் கிளம்பிச் சென்றனர்.


Click it and Unblock the Notifications