சென்னை: ஆசிய விளையாட்டிலும் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வெல்வோம் என்று தமிழகத்தை சேர்ந்த தங்க மங்கைகள் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் கூறியுள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப்பாவும் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தனர்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோஷ்னா செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது 'ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்குரிய எல்லாவிதமான தகுதியும் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு உண்டு. ஆனால் ஒலிம்பிக்கில் இதுவரை ஸ்குவாஷ் இடம் பெறாதது வருத்தத்திற்குரியது என்றார்.
2020ல் ஏமாற்றம்
2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான பட்டியலில் ஸ்குவாசும் இடம் பிடித்திருந்தது. ஆனால் மல்யுத்தம் மீண்டும் சேர்க்கப்பட்டதால் ஸ்குவாசுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ஸ்குவாஷ் இதயங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
காமன்வெல்த் தங்கம்
இப்போது நாங்கள் காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற பிறகு ஸ்குவாஷ் விளையாட்டு பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
பிரபலமாகும் ஸ்குவாஷ்
ஆன்-லைனில் இந்த விளையாட்டை நிறைய பேர் பார்க்கிறார்கள். விரைவில் வர உள்ள ஆசிய விளையாட்டிலும் சாதித்தால், இந்த போட்டி மேலும் பிரபலமாகும்.
ஒலிம்பிக் போட்டியில்
அது பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டதால், ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு எளிதாக இருக்கும்.
ஸ்குவாஷ், ஒலிம்பிக்கில் எப்போது இடம் பெறும் என்பதை என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் விரைவில் இடம் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.
ஆசியப்போட்டியில் தங்கம்
இதே கருத்தை கூறிய தீபிகா பலிக்கல், ஜோஷ்னாவை பாராட்டினார்., 'இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஷ்னா காயத்தால் அவதிப்பட்டார். அந்த காயம் அவரது ஸ்குவாஷ் வாழ்க்கையையே முடித்துவிடும் அளவுக்கு இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் போராடி அத்தகைய பின்னடைவில் இருந்து மீண்டு தனக்கு என்று ஒரு இடத்தை நிலை நிறுத்திக் கொண்டார். இது தான் அவரிடம் எனக்கு பிடித்தது. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. ஆசிய போட்டியில் பதக்கம் வெல்வோம் என்று நம்புகிறேன்' என்றார்.