டெல்லி: அடுத்த மாதம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய ஸ்குவாஷ் அணி, கடந்த மார்ச் மாதம் முதல் கோச் இல்லாமல் திண்டாடுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சாந்து, தீபிகா பலிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனன்யா குருவில்லா, தான்வி கன்னா, ராமித் டான்டன், மகேஷ் மங்கோவன்கர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் கோச்சாக இருந்த எகிப்தைச் சேர்ந்த அச்பார் எல் கரார்குய், மார்ச் மாதம் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு, புதிய கோச் நியமிக்கப்படவில்லை.
அதனால், சவுரவ் கோஷல், தீபிகா பலிகல், ஜோஷ்னா சின்னப்பா போன்ற சீனியர் வீரர்கள் பல்வேறு கோச்களின் கீழ் வெளிநாட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் சவுரவ் கவுசல் மற்றும் ஜோஷ்னா, இங்கிலாந்தில் தனித் தனி கோச்களிடம் பயிற்சி எடுக்கின்றனர். தீபிகா பலிகல், எகிப்தியில் முன்னாள் கோச்சான கரார்குய்யிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
ஹரிந்தர் பால் சிங்கும் இங்கிலாந்தில் பயிற்சி எடுக்கச் செல்கிறார். இந்திய அணிக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து வீரர்களும் கலந்து கொள்ளும்படி கூறப்பட்டுள்ளனர்.
ஸ்குவாஷ் சங்கத்தின் சார்பில் சைரஸ் போன்சா, தேசிய கோச்சாக உள்ளார். அவரும், முன்னாள் தேசிய சாம்பியனான புவனேஸ்வரி குமாரியும் ஜகார்த்தா செல்ல உள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை இந்திய வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித்ததில்லை என்று கூறப்படுகிறது. தனித்தனியாக பயிற்சி எடுத்தாலும், குழு பிரிவில் விளையாட சரியான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அது இல்லாமலேயே வீரர்கள் ஜகார்த்தா செல்ல உள்ளனர்.