சீறிய ஜெய்ப்பூர் சிறுத்தை
லக்னோ: புரோ கபடி லீக், 5வது சீசனில், இதுவரை நடந்துள்ள மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கும், பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டம். கடைசி விநாடியில், 30 - 28 என, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி வென்றது.
புரோ கபடி லீக் சீசன் 5ல், இரண்டு மண்டலங்களாக, 12 அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது மண்டலங்களுக்கு இடையேயான ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் ஏ மண்டலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கும், பி மண்டலத்தில் உள்ள பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி, நேற்று இரவு நடந்தது.
முதல் சீசனில் கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் அணியின் ஜஸ்விர் சிங், 10 புள்ளிகளும், ஒன் மேன் ஆர்மி என்றழைக்கப்படும் மஞ்சித் சில்லார், எட்டு புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஆட்டத்தில் முதல் ஐந்து நிமிடங்களில் இரு அணிகளும், மிகவும் எச்சரிக்கையுடன், வீரர்களை இழக்காமல், போனஸ் புள்ளிகளைப் பெற்று வந்தனர். 7வது நிமிடத்தில் 6-2 என ஜெய்ப்பூர் முன்னிலை பெற்றது. பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார், தனி ஆளாக, ஜெய்ப்பூர் அணியை எதிர் கொண்டார். ஆனால் தவறுகள் செய்து, பெரும்பாலான நேரம், அவர் வெளியிலேயே இருக்க நேர்ந்தது.
முதல் பாதியில், 17-14 என ஜெய்ப்பூர் முன்னிலையில் இருந்தது. களத்தில் இருந்த நேரத்தில் எல்லாம், பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார், புள்ளிகளை எடுத்ததுடன், ஜெய்ப்பூர் அணிக்கு சவாலாகவே இருந்தார்.
ஒரு நிலையில் 26-16 என ஜெய்ப்பூர் முன்னிலையில் இருக்க, பெங்களூரு புல்ஸ் அணி, திடீரென சுதாரித்து விளையாடி, இடைவெளியை குறைத்து வந்தது.
ஆட்டம் முடிவடைய, 10 விநாடிகள் இருக்கும்போது, 29-28 என்று வித்தியாசத்தை குறைத்தது பெங்களூரு புல்ஸ். கடைசி சில விநாடிகளில் புள்ளி எடுத்து டையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 30-28 என வென்றது,
Story first published: Saturday, August 19, 2017, 19:18 [IST]
Other articles published on Aug 19, 2017


Click it and Unblock the Notifications