கோபி பிரையன்ட் மரணம்
விளையாட்டு உலகில் அதிகமானவர்கள் இருந்தாலும் ஒருசிலரே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான இடத்தை பிடிக்கின்றனர். அதில் கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட்டும் ஒருவர். தன்னுடைய கேரியரில் பல வெற்றிகளை பெற்று ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த கோபி பிரையன்ட் 41 வயதிலேயே உயிரிழந்ததுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம்.
ஹெலிகாப்டர் விபத்து
கூடைப்பந்தாட்டத்தில் மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிரையன்ட், தன்னுடைய மகளை தன்னுடைய வாரிசாக தயார்படுத்தி வந்தார். அதற்கென ஒரு போட்டியில் பங்கேற்க அவர்கள் இருவரும் சென்றபோது தான் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் தெற்கு கலிபோர்னியாவில் கடந்த ஜனவரி 26ம் தேதி விபத்துக்குள்ளானது.
பனிமூட்டம் காரணம்
லாஸ் ஏஞ்சல்சின் மேற்கு புறநகர் பகுதியான காலாபஸாஸ் மலைப்பகுதியில் பனிமூட்டம் காரணமாக அவர்கள் சென்ற சிக்ரோசி எஸ் -76 ரக ஹெலிகாப்டர் விழுந்து நெருங்கி தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த பயணத்தின்போது அவர்களுடன் சென்ற மேலும் 7 பேரும் உயிரிழந்தனர்.
உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்பு
அவர்களின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிய தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்து பல்வேறு வகையான சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தன்னுடைய 41வது வயதிலேயே பிரையன்ட் உயிரிழந்தார். அதேபோல உயிரிழந்த அவரது மகள் ஜியான்னாவின் வயது 13.
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம்
அமெரிக்காவின் கூடைப்பந்து வீரரான கோபி பிரையன்ட், தன்னுடைய லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி, 5 என்பிஏ கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் 2 முறை ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும் கோபி வென்றுள்ளார். கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக பிரையன்ட் கருதப்படுகிறார்.
20 முறை என்பிஏவில் போட்டி
இந்த அணிக்காக அவர் தொடர்ந்து என்பிஏ தொடர்களில் 20 முறை விளையாடியுள்ளார். கடந்த 2016ல் அவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். கூடைப்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த கோபி பிரையன்டின் இந்த அகால மரணம் அவர் சார்ந்த விளையாட்டுத்துறையினரை மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.