கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் ஸ்ரீகண்டதத்த உடையார் காலமானார்
பெங்களூர்: கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மாரடைப்பால் திடீரென இன்று காலமானார்.
மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார். கடந்த 1-ந் தேதி நடைபெற்ற கர்நாடகா கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் உடையார் அணி அபார வெற்றி பெற்றது.

ஸ்ரீகண்டதத்த உடையார் தலைவராகவும் அவரது அணியின் பிரிஜேஸ் படேல் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ந் தேதி நடைபெற்ற கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் டிசம்பர் 7-ந் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஸ்ரீகண்டதத்த உடையார் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த பிரிஜேஸ் படேல், உடையாரின் மரணம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. கர்நாடகாவில் கிரிக்கெட்டை மேம்படுத்த எண்ணற்ற திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்தார் என்று கூறியுள்ளார்.
மைசூர் லோக்சபா தொகுதியில் இருந்து 4 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உடையார். 2007ஆம் ஆண்டு கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2010ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அனில்கும்ப்ளே உடையாரை தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications