கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற சீனியரான மேரி கோம், நாளை நடக்கும் நிறைவு விழாவில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும், 21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இம்மாதம் 4ம் தேதி துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதில் 10வது நாளான இன்று, இதுவரை இந்தியா 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என, 57 பதக்கங்களை குவித்துள்ளது. அட்சய திருதியை நாளான இன்று மட்டும் இந்தியா 8 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்றது.
மகளிர் 48 கிலோ குத்துச்சண்டையில் தங்கம் வென்று அசத்தினார் 35 வயதாகும் மேரி கோம். மூன்று குழந்தைகளின் தாயான அவர், காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக பங்கேற்று, பதக்கம் வென்றுள்ளார். நாளை நடக்க உள்ள காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில், இந்திய அணிக்கு தலைமையேற்று, தேசியக் கொடியை அவர் ஏந்திச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் நடந்த அணிவகுப்பில், பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஐந்து முறை ஆசிய சாம்பியனான மேரி கோம், கடந்த ஐந்து மாதங்களில் நடந்த மூன்று போட்டிகளில் பதக்கம் வென்றார்.