டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் என். சீனிவாசனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவர் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தலையிடவும் இல்லை என்று முத்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சீனிவாசனுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. அவர் மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் வாய்ப்பும் கை கூடி வந்துள்ளது.
ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது முத்கல் கமிட்டி. இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் மேற்கொண்டார். தனது இறுதி விசாரணை அறிக்கையை அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
35 பக்கம் கொண்ட இந்த அறிக்கையை இன்று உச்சநீதிமன்றம் பகிரங்கப்படுத்தியது. அதில் சீனிவாசனுக்கும் சூதாட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று நீதிபதி முத்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பான விசாரணையில் சீனிவாசன் எந்த வகையிலும் தலையிடவும் இல்லை என்றும் நீதிபதி முத்கல் கூறியுள்ளார்.
அதேசமயம், சீனிவாசனும், ஐபிஎல் தலைமை செயலதிகாரி சுந்தர்ராமன் மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு பெட்டிங் நடப்பது குறித்து தெரிந்துள்ளது. ஆனால் அதைத் தடுக்கும் முயற்சியிலோ, நடவடிக்கை எடுக்கும் முயற்சியிலோ அவர்கள் ஈடுபடவில்லை என்று முத்கல் கமிட்டி கூறியுள்ளது.
சீனிவாசன் உள்பட மொத்தம் 13 பேரிடம் முத்கல் கமிட்டி பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தது.
இந்த விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து சீனிவாசன் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு தற்காலிக தலைவராக முன்னாள் கேப்டன் கவாஸ்கரை அது நியமித்திருந்தது.
வெள்ளிக்கிழமையன்று முத்கல் கமிட்டி அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அரிக்கையில், சீனிவாசன், அவரது மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா, முன்னால் ஐபிஎல் தலைமை செயலதிகாரி சுந்தரராமன் ஆகியோர் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தது. இந்த நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அறிக்கையின் சில பகுதிகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் குருநாத் மெய்யப்பன் பெட்டிங் மற்றும் அணித் தகவல்களை பகிர்ந்து கொண்டது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக முத்கல் கமிட்டி தனது முதல் அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
முத்கல் கமிட்டி நவம்பர் 14ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த சீனிவாசன், நான் சுத்தமானவன். குருநாத் மெய்யப்பன் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக என்னை தண்டிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
தற்போது சீனிவாசன் தவறு செய்யவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் பிசிசிஐ தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 20ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐசிசி தலைவராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் சீனிவாசன் பதவி வகித்து வருகிறார்.