மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது தவறில்லை - ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி
டெல்லி: தேசிய விளையாட்டு ஆணையம் வழங்கிய உணவில் ஊக்கமருந்து இருந்தது. விடுதியில் வழங்கப்பட்ட உணவில் ஊக்கமருந்து கலந்திருந்தது தெரியாமலேயே அவர் உணவை உட்கொண்டார். மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது எந்த தவறும் இல்லை என்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் 5ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.
ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நர்சிங்கின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது. இதனால் மனமுடைந்து போனார் நர்சிங்.

போராடிய நர்சிங் யாதவ்
நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பர்வீன் ராணா ஒலிம்பிக்கில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நர்சிங்கோ தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாகக் கூறி போராடி வந்தார்.

ஜூனியர் மீது புகார்
'சோன்பட் சாய் மையத்தில் பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஜித்தேஷ் என்பவர் ஸ்டீராய்டை கலந்ததாக குற்றம் சாட்டிய நர்சிங் யாதவ் ஹரியானா மாநிலம், சோன்பட் மாவட்டத்தில் உள்ள ராய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணை
நர்சிங் யாதவ் விவகாரம் குறித்து சோன்பட் "சாய்' (இந்திய விளையாட்டு ஆணையம்) மையத்தில் உள்ள பயிற்சியாளர்கள், வார்டன்கள் உள்ளிட்டோரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். பயிற்சியாளர்கள், வார்டன்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற்றனர். அங்கிருந்த சில பாத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு
நர்சிங் யாதவ் விவகாரத்தில் தனது விசாரணையை வியாழக்கிழமையுடன் முடித்துக் கொண்ட தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இன்று திங்கள்கிழமை தனது முடிவை அறிவித்தது.

நர்சிங் யாதவ் மீது தவறில்லை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் நர்சிங் யாதவ் உணவு உட்கொண்ட உணவில்தான் ஊக்கமருந்து கலக்கப்பட்டது என்றும் ஊக்கமருந்து கலக்கப்பட்டது தெரியாமலேயே அவர் உணவை உட்கொண்டது விசாரணையில் தெரியவந்ததாகவும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நர்சிங் யாதவிற்கு தடை ஏதும் கிடையாது என்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அறிவித்தது. தனக்கு எதிரான சதியை முறியடித்து போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் நர்சிங் யாதவ்.

ரியோ செல்வார் நர்சிங்
தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் இருந்து நர்சிங்கிற்கு சாதகமான முடிவு வரும் பட்சத்தில், மீண்டும் நர்சிங்கையே ரியோ ஒலிம்பிக்கிற்கு அனுப்ப இந்திய மல்யுத் சம்மேளனம் விரும்பினால், சர்வதேச மல்யுத்த சம்மேளனமும் அதற்கு ஒப்புக் கொண்டால், அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications