டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேலோ இந்தியா என்ற தொலைபேசி செயலி டெல்லியில் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்த செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
கேலோ இந்தியா செயலியானது இந்தியாவில் விளையாட்டை முன்னேற்றவும், வீரர்களை ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் மூன்று பகுதிகள் உள்ளன. 1. எப்படி விளையாடுவது? 2. எங்கே விளையாடுவது? 3. உடற்தகுதி மேம்படுத்துதல்
எப்படி விளையாடுவது என்ற பகுதியின் கீழ் தற்போது சுமார் 18 விளையாட்டுக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எங்கே விளையாடுவது என்ற பகுதியின் கீழ் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியின் அருகே உள்ள விளையாட்டு மையங்கள் மற்றும் பயிற்சி கூடங்கள் குறித்த தகவல்களை பெற முடியும்.
உடற்தகுதி என்ற பகுதியில் பல்வேறு தேர்வுகள் மற்றும் அதன் பதிவுகள் இடம் பெறும். இதன் மூலம் நாடு முழுவதும் விளையாடத் தகுதியான நபர்களை எளிதாக இனம் காண முடியும் என கூறப்படுகிறது.
தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இந்த செயலி கிடைக்கிறது. ஒருமுறை தரவிறக்கம் செய்த பின், இணைய இணைப்பு இல்லாமலேயே இதை அனைவரும் பயன்படுத்த முடியும்.